சீனாவுடனான பஞ்சாயத்துக்கு விரைவில் தீர்வு.. டிரம்ப் கொடுத்த அப்டேட்! அப்போ இந்தியா நிலைமை?
வாஷிங்டன்: சீனாவுக்கு அமெரிக்கா 100% வரியை விதித்திருக்கும் நிலையில், இந்த வரி நிரந்தரமானது கிடையாது என்றும், அடுத்த 2 வாரத்தில் சீன அதிபரை சந்திக்க இருக்கிறேன் என்றும் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
இன்று செய்தியாளர்களிடையே பேசிய டிரம்ப், "சீனா மீதான வரி நிலையானது இல்லை. ஆனால், இதுதான் தற்போதுள்ள நிலை. இதைச் செய்ய அவர்கள் என்னை கட்டாயப்படுத்தினார்கள்" என்று தெரிவித்தார். இந்த அதிக வரிவிதிப்பு, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்புக்கு முன்னர் அழுத்தம் கொடுக்க எடுக்கப்பட்ட ஒரு தீவிர நடவடிக்கை என்றும் அவர் விளக்கினார்.

மேலும், "சீனாவுடன் நிலைமை சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன்" என்றும் டிரம்ப் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் சீனப் பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என்று அக்டோபர் 10 அன்று டிரம்ப் அறிவித்திருந்தார். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் கணக்கில், "சீனாவின் முன் எப்போதும் இல்லாத நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா தற்போதுள்ள வரிகளுக்கு மேலதிகமாக, சீனாவிற்கு 100% வரி விதிக்கும்" என்று பதிவிட்டிருந்தார். மேலும், அனைத்து முக்கியமான மென்பொருட்களுக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பஞ்சாயத்துகளுக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று தன்னை விட சீனா வேகமாக வளர்வதை அமெரிக்க விரும்பவில்லை. குறிப்பாக டீப் சீக் போன்ற ஏஐ தொழில்நுட்ப விவகாரத்தில் சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவுக்கு பெரிய சவாலை ஏற்படுத்தியிருந்தது. இத்தனைக்கும் சீனாவுக்கு தொழில்நுட்ப ரீதியாக ஏராளமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், ஏஐ வளர்ச்சிக்கும் செமிகண்டக்டர் எனும் பொருள் மிகவும் முக்கியம்.
ஆனால் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் சக்தி வாய்ந்த செமிகண்டக்டர்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் சீனா சாதனை செய்து காட்டியது. இது வெறும் ஒரு உதாரணம்தான். இப்படி ஏராளமான கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்திருந்தது. பதிலுக்கு சீனா மிக முக்கிய செக் ஒன்றை வைத்தது. அதாவது உலக அளவில் அரிதான கனிமங்கள் சீனாவிலிருந்துதான் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா மறுத்துவிட்டது. இதனால் அமெரிக்காவின் ஆட்டோமொபைல் துறை அப்படியே அடிவாங்கியது. இந்த பின்னணியில்தான் நவ.1 முதல் 100% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
சீனாவுக்கு வரி போட்டால் அதை நியாயப்படுத்த காரணம் இருக்கிறது. ஆனால் இந்தியா மீதும் டிரம்ப் வரி போட்டார். இதனால் இந்தியா கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. இந்த வரி எப்போது விலக்கிக்கொள்ளப்படும் என்றும் கேள்வி எழுந்திருக்கிறது. தற்போது சீனாவிடம் அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பதால், விரைவில் இந்தியாவுடனான பஞ்சாயத்தும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications