"காஷ்மீர் பிரச்சினைக்கு நான் தீர்வு தரேன்.." டிரம்ப் தடாலடி.. அடுத்து சொன்ன வார்த்தையை நோட் பண்ணுங்க
வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்த மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்பு மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததே நான்தான் என நேற்று டிரம்ப் கூறியிருந்தார். இதற்கிடையே இன்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே தீர்வை ஏற்படுத்த முயலப் போவதாக அவர் கூறியிருக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தொடர்ந்து வந்தது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பொறுக்க முடியாமல் பாகிஸ்தான் அப்பாவி மக்களைக் குறிவைத்துத் தாக்கியது. அதற்கு இந்தியா திருப்பி அடிக்கவே பாகிஸ்தான் திணறிப்போனது. இதனால் தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. அதை இந்தியாவும் ஏற்கவே மோதல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

இந்தியா பாகிஸ்தான்
இரு தரப்பு மோதல் முடிவுக்கு வந்ததை முதலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் அறிவித்தார். மிக நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு தரப்பும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், இந்தியா பாகிஸ்தான் இரு தரப்பும் வெளியிட்ட அறிக்கையில் டிரம்ப் மத்தியஸ்தம் குறித்து எந்தவொரு கருத்தும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவர் சர்வதேச நாணய நிதியத்தின் லோனை வைத்து பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே காஷ்மீர் விவகாரம் குறித்தும் டிரம்ப் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரத்தில் 1000 ஆண்டுகளாக மோதல் இருப்பதாகக் குறிப்பிட்ட டிரம்ப், இந்த விவகாரத்தில் ஒரு தீர்வை எட்ட இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியிருக்கிறார்.
அதிபர் டிரம்ப்
இது குறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில், "இப்போது ஏற்பட்ட மோதலை நிறுத்த வேண்டிய நேரம் இது என்பதை முழுமையாக அறிந்து புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைப் பெற்ற இரு தலைமைகளை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.. இந்த மோதல் தொடர்ந்திருந்தால் பலரின் மரணத்திற்கும் பேரழிவுக்கும் வழிவகுத்திருக்கலாம்.
மில்லியன் கணக்கான நல்ல மற்றும் அப்பாவி மக்கள் இறந்திருக்கலாம்! உங்கள் துணிச்சலான செயல்களை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த வரலாற்று மற்றும் வீரமிக்க முடிவை எட்டுவதற்கு அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். மேலும், இந்த இரண்டு பெரிய நாடுகளுடனும் நான் வர்த்தகத்தையும் அதிகரிக்கப் போகிறேன்.
1000 ஆண்டுகளாம்
காஷ்மீர் விவகாரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தீர்வை எட்ட முடியுமா என்பதைப் பார்க்க இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவேன். இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைமைக்கு வாழ்த்துகள்.. காட் பிளஸ் யூ" என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்தியா பாகிஸ்தான் இடையே சுதந்திரத்திற்கு பிறகே மோதல் இருக்கிறது. ஆனால், டிரம்ப் 1000 ஆண்டுகளுக்கு மேலாகப் பிரச்சினை இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
காஷ்மீர்
காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி. ஆனால், அதைத் தனது நாட்டின் ஒரு பகுதி எனச் சொல்லி பாகிஸ்தான் தேவையில்லாமல் பிரச்சினை செய்து வருகிறது. நேரடியாகவும் சரி, தீவிரவாதிகளை அனுப்பியும் சரி காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து பிரச்சினை செய்து வருகிறது. இந்தியாவும் ஒவ்வொரு சமயமும் பாகிஸ்தானுக்குத் தக்கப் பதிலடி கொடுத்து வருகிறது. எவ்வளவு அடி வாங்கினாலும் பாகிஸ்தான் தனது அத்துமீறலைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தச் சூழலில் தான் இரு தரப்பிற்கும் இடையே தான் சமாதானம் செய்து வைப்பதாக டிரம்ப் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications