திடீரென பல்டி அடித்த டிரம்ப்.. ரெசிப்ரோக்கல் வரி ஆகஸ்ட் 1 வரை இல்லை.. ஒரே நாளில் எல்லாமே மாறிடுச்சு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரி நிறுத்தி வைப்பு காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. இதன் பிறகு டிரம்ப் என்ன செய்வார் என்பதில் குழப்பம் நிலவி வந்தது. டிரம்ப் காலக்கெடுவை நீடிப்பாரா.. இல்லை திட்டமிட்டபடி கூடுதல் வரிகள் அமலுக்கு வருமா என்பதில் குழப்பமான சூழலே நிலவி வந்தது. இந்தச் சூழலில் தான் ரெசிப்ரோக்கல் வரியை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீடித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்,
அமெரிக்க அதிபரான டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்திருந்தார். பிறகு சில காரணங்களால் ரெசிப்ரோக்கல் வரியை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இந்த ஜூலை 9 காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது. இதனால் டிரம்ப் மீண்டும் ரெசிப்ரோக்கல் வரியை அறிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்கா
இருப்பினும், தற்போது வரை பிரிட்டன் மட்டுமே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. இந்தியா உட்பட மற்ற நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், ஒப்பந்தம் இறுதியாகவில்லை. இதுபோல பல நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், திடீரென நடுவில் ரெசிப்ரோக்கல் வரி மீண்டும் வந்தால் அது பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுவதாக அமையும் என்ற சூழலே இருந்தது. இந்தச் சூழலில் தான் ரெசிப்ரோக்கல் வரி நிறுத்தி வைப்பதை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீடித்துள்ளதாக டிரம்ப் அரசு அறிவித்துள்ளது.
டிரம்ப் பல்டி
இது தொடர்பான உத்தரவில் டிரம்ப் நேற்று திங்கள்கிழமை கையெழுத்திட்டார். நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உலக நாடுகளுக்குக் கூடுதல் நடவடிக்கை அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரி நிறுத்தி வைப்பை நீடித்துள்ளதை வெள்ளை மாளிகையும் உறுதி செய்துள்ளது. உலக நாடுகளுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தை காரணமாகவே காலக்கெடு நீடிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி அறிவித்த ரெசிப்ரோக்கல் வரியில் இந்தியாவுக்கு 26% வரி விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், அமலுக்கு வரும் முன்பே அந்த வரியை ஜூலை 9 வரை நிறுத்தி வைத்தார். அதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகள் ரெசிப்ரோக்கல் வரி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இப்போது வரை பெரும்பாலான துறைகளில் இந்தியா அமெரிக்கா இடையே உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாம்.
இந்தியாவின் நிலைப்பாடு
இன்னும் சில துறைகளில் மட்டுமே உடன்பாடு ஏற்படவில்லையாம். குறிப்பாக விவசாயத் துறையில் இறக்குமதியை அனுமதிக்க இந்தியா விரும்பவில்லை. பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்க இதுவும் ஒரு காரணம். இருப்பினும், இன்னும் ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை முடிந்து, வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்படும் என்றே தெரிகிறது.
அடுத்து என்ன
இதன் காரணமாக டிரம்பின் இந்த நடவடிக்கையை இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் (FIEO) டைரக்டர் ஜெனரல் அஜய் சஹாய் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயாராக இருக்கிறது. எஞ்சியிருக்கும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் குறித்துப் பேசி முடிவு செய்வார்கள். இன்னும் சில நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும்" என்றார்.
அதாவது டிரம்ப் அரசு 3 வாரங்களுக்கு இறக்குமதி வரியை நிறுத்தி வைத்துள்ளது. இது இந்தியாவுக்குச் சாதகமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் இந்தியா உட்படப் பல நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications