இந்தியாவுக்கு 500% வரி? ஓகே சொன்ன ட்ரம்ப்! அமெரிக்காவில் அடுத்த வாரமே வரும் புது மசோதா.. சிக்கல்
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரை வரி விதிக்க டிரம்ப்பிற்கு அதிகாரம் கொடுக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது. ட்ரம்ப் இந்த மசோதாவுக்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில், இது சட்டமானால் இந்தியாவுக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறிவிடும்!
ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் நாடுகளைத் தண்டிக்க அமெரிக்காவுக்கு அனுமதிக்கும் தடை மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது. இந்த மசோதாவுக்கு ட்ரம்ப் ஆதரவும் கிடைத்துள்ளது. அதாவது இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ட்ரம்ப் உடனடியாக இதற்கு ஒப்புதல் கொடுத்துவிடுவார். இந்த மசோதா மீது அடுத்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கும் எனத் தெரிகிறது.

500% வரி
இதன் மூலம் இந்தியா மற்றும் சீனாவுக்கான வரிகளை 500 சதவீதம் வரை அமெரிக்காவால் உயர்த்த முடியும். கச்சா எண்ணெய் மட்டுமின்றி ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம் வாங்கும் நாடுகளுக்கும் இதன் மூலம் வரியை உயர்த்த முடியுமாம். டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த லிண்ட்சே கிரஹாம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ரிச்சர்ட் ப்ளூமென்டல் ஆகியோர் இணைந்து இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளனர்.
இந்த மசோதா மட்டும் நிறைவேறினால் அது டிரம்ப்பிற்கு மிகப் பெரிய பவரை கொடுக்கும். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்காவால் அதிகபட்ச வரியை விதிக்க முடியும். வரிச் சுமை காரணமாக இந்த நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்.. இதன் மூலம் நிதி கிடைக்காமல் உக்ரைன் போர் முடியும் என்பது அமெரிக்காவின் நம்பிக்கை!
தண்டிக்க முடியும்
இது தொடர்பாக கிரஹாம் தனது ட்விட்டரில், "உக்ரைன் போர் நிறுத்தம் செய்ய ஓகே சொல்லியுள்ளது. ரஷ்யா ஒரு பக்கம் பேசிக் கொண்டே இன்னொரு பக்கம் அப்பாவி மக்களைக் கொல்கிறது. இந்த மசோதா சரியான நேரத்தில் வந்துள்ளது.. போருக்கு எரிபொருள் கொடுப்பது போல ரஷ்ய எண்ணெய்யைச் சில நாடுகள் வாங்குகிறார்கள். இந்த மசோதா மூலம் அந்த நாடுகளை அதிபர் டிரம்ப்பால் தண்டிக்க முடியும்" எனப் பதிவிட்டுள்ளார்.
முக்கியம்
இதில் மற்றொரு முக்கியமான பாயிண்டும் இருக்கிறது. அதாவது அமெரிக்க எரிசக்திகளை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதும், ரஷ்ய முதலீடுகளையும் இந்த மசோதா தடை செய்கிறது. இந்த மசோதா மீது விரைவில் வாக்கெடுப்பு நடக்கும் என்றே தெரிகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை என்ன தான் அதிபர் ஆதரவே இருந்தாலும் கூட அனைத்து மசோதாவும் நிச்சயம் நிறைவேறும் என சொல்ல முடியாது. எனவே, இந்த மசோதா நிறைவேறுகிறதா இல்லையா என்பதை முக்கியமாக நாம் கவனித்துப் பார்க்க வேண்டும்.
இந்தியாவுக்கான வரி
மற்றொரு பக்கம் இந்தியாவின் மீது இறக்குமதி வரிகளை உயர்த்த அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதும் நமக்குக் கவலை தருவதாகவே இருக்கிறது. இப்போது, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய்யை வாங்குகிறது. ஏற்கனவே, இதற்காக இந்தியா மீது டிரம்ப் 50% வரியை டிரம்ப் விதித்துள்ளார். இது இந்தியா- அமெரிக்கா உறவுகளைப் பாதித்தது. இருப்பினும், சமீபத்தில் தான் இந்தியா மீதான வரியை உயர்த்த ரெடி என்பது போல டிரம்ப் கூறியிருந்தார்.
இது தொடர்பாக டிரம்ப் மேலும், "எனது செயல்களால் மோடி மகிழ்ச்சியாக இல்லை என்பது எனக்குத் தெரியும். என் மீது அவர் அதிருப்தியில் இருக்கிறார். மோடி ஒரு மிக நல்ல மனிதர். அவர் நல்லவர். ஆனால், என்னை மகிழ்ச்சியடையச் செய்வது முக்கியம். நான் நினைத்தால் வரியை மேலும் கூட உயர்த்த முடியும்" என்று அவர் கூறியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் 500% வரியை அனுமதிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications