“கிரீன்லாந்து விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்.. நாங்கள் அதை செய்வோம்!” டிரம்ப் வார்னிங்
வாஷிங்டன்: வெனிசுலாவை முடித்த கையோடு, கிரீன்லாந்து பக்கம் திரும்பியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஆக்கிரமிப்பு திட்டத்திற்கு கிரீன்லாந்து ஒப்புதல் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் நிச்சயம் அது நடக்கத்தான் போகிறது என்று டிரம்ப் கூறியிருக்கிறார். இந்த கருத்து சர்வதேச அளவில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
கிரீன்லாந்து வட அமெரிக்க கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், அதன் கட்டுப்பாடு முழுவதும் ஐரோப்பிய நாடான டென்மார்க் வசம்தான் உள்ளது. கிரீன்லாந்துக்கு ராணுவ பாதுகாப்பு கொடுத்து வருவது டென்மார்க்தான். எனவே டிரம்பின் பேச்சுக்கு டென்மார்க் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

டிரம்ப் உறுதி
வெனிசுலா விவகாரம் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடன் டிரம்ப் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதில், கிரீன்லாந்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "கிரீன்லாந்தை எப்படியாவது நாங்கள் கட்டுக்குள் கொண்டு வருவோம். அவர்களுக்கு பிடிக்கிறதோ, இல்லையோ, ஆனால் நாங்கள் இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறோம்.
2 ஆப்ஷன்கள்
அவர்களுக்கு நாங்கள் இரண்டு வாய்ப்புகளை வைத்திருக்கிறோம். ஒன்று உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் மூலம் கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவது. இந்த ஐடியாவுக்கு அவர்கள் ஒத்துழைக்கவில்லை எனில், ராணுவ பலத்த பயன்படுத்தி அதை கைப்பற்ற தயங்க மாட்டோம் என்பது இரண்டாவது ஆப்ஷன்" என்கிற ரீதியில் பேசியிருக்கிறார்.
அமெரிக்காவின் அச்சம்
ஆர்டிக் பிராந்தியத்தில்தான் கிரீன்லாந்தும் இருக்கிறது. இங்கு ரஷ்யா மற்றும் சீனாவின் ராணுவ நடவடிக்கை அதிகரித்து வருவதால், கிரீன்லாந்தை நாங்கள் கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் டிரம்ப் பேசியிருக்கிறார். கிரீன்லாந்து பார்ப்பதற்கு பனி படர்ந்த தீவு போல தெரிந்தாலும், அங்கு இல்லாத இயற்கை வளங்களே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு.. வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. எனவே நாங்கள் முந்தவில்லை எனில், ரஷ்யா அல்லது சீனா முந்திக்கொள்ளும் என்றும் டிரம்ப் அச்சம் தெரிவித்திருக்கிறார்.
சர்ச்சை பேச்சு
மட்டுமல்லாது, "500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படகு அங்கு வந்து இறங்கியது என்பதற்காக, அந்த நிலம் அவர்களுக்கு சொந்தமாகிவிடாது" என்றும் டென்மார்க்கை, டிரம்ப் நக்கலாக பேசியிருப்பதும் பஞ்சாயத்தை கூட்டியுள்ளது.
கிரீன்லாந்து எதிர்ப்பு
கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பது தொடர்பாக என்ன காரணம் சொன்னாலும், அதை ஏற்க முடியாது என டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன. டென்மார்க் பிரதமர் இது குறித்து கூறுகையில், "கிரீன்லாந்து மீது படையெடுத்தால், அது இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நிலவி வரும் அமைதியையும், நேட்டோ கூட்டமைப்பையும் முடிவுக்கு கொண்டுவந்துவிடும்" என்று எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் அடுத்த வாரம், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோ, கிரீன்லாந்துக்கு பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications