போகும் போது சும்மா போகலை.. சரமாரியாக கையெழுத்து போட்ட அதிபர்.. 73 பேரை மன்னித்த டிரம்ப்.. ஷாக்!
வாஷிங்க்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்காலம் இன்றோடு முடியும் நிலையில் அதிபர் டிரம்ப் மொத்தம் 73 பேரின் குற்றங்களை மன்னித்துள்ளார். தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி இவர்களின் குற்றங்களை மன்னித்துள்ளார்.
தனக்கு நெருக்கமானவர்கள், தேர்தலின் போது உதவியவர்கள், வலதுசாரி அரசியல் கொள்கை கொண்டவர்கள் என்று முக்கியமான நபர்களின் குற்றத்தை மன்னித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஒரு அதிபராக கடைசி நாட்களில் டிரம்ப் எடுத்த இந்த முடிவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் தனது சக்தியை பயன்படுத்தி தேசிய அளவில் விசாரிக்கப்படும் குற்றங்களில் மன்னிப்பு வழங்க முடியும். இந்த அதிகாரம் மூலம் டிரம்ப் தனக்கு நெறுக்கமான 73 பேரை காப்பாற்றி இருக்கிறார்.

யார்
டிரம்ப் முதல் ஆளாக மன்னிப்பதாக அறிவித்தது அவரின் நெருங்கிய நண்பர் ஸ்டீவ் பானன். இந்த பெயரை எங்கேயோ கேள்விபட்டது போல இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இவர்தான் டிரம்பின் அமெரிக்க -மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தை தேர்தலின் போது வடிவமைத்தது. 2016 அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் பிரச்சாரத்தை வடிவமைத்தவர் ஸ்டீவ்தான்.

கைது
ஸ்டீவ் பானன் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்டீவ் மற்றும் அவர் கூட்டாளிகள் மூவர் இணைந்து "நாம் சுவரை உருவாக்குகிறோம்" (We Build The Wall) என்ற பெயரில் ஆன்லைன் நிதி திரட்டும் திட்டத்திற்கு நன்கொடை பெற்றுள்ளனர். இப்படி நிதி பெற்று மோசடி செய்த பானன் தற்போது பெடரல் அதிகாரிகள் மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

குற்றம்
இதுபோக இனவெறியை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டது உள்ளிட்ட பல புகார்கள் இவர் மீது உள்ளது . இவர் மீது இருக்கும் பெடரல் குற்றங்களை மன்னித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது போல நிதி மோசடியில் ஈடுபட்ட வலதுசாரி கொள்கை கொண்ட எலியட் பிரைடி என்ற தனது நண்பரையும் டிரம்ப் மன்னித்துள்ளார். லில் வெய்ன், கோடாக பிளாக் போன்ற ஆயுத வழக்கில் கைதானவர்களையும் டிரம்ப் வசதியாக மன்னித்துள்ளார்.

எப்படி
முக்கியமாக கடந்த 2016 தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறி அந்த விசாரணையில் கைது செய்யப்பட்ட இப்போதும் விசாரணை வலையில் இருக்கும் ரஷ்யாவிற்கு நெருக்கமான பல அமெரிக்க முன்னாள் அதிகாரிகளை டிரம்ப் மன்னித்து உள்ளார். தமிழ்ப்படத்தில் சிவா இரண்டு கையால் வேகமாக கையெழுத்து போடுவது போல் சரமாரியாக கையெழுத்து போட்டு பலரை டிரம்ப் மன்னித்துள்ளார்.

மன்னிக்கவில்லை
இதில் பலரை மன்னிப்பதற்கு எதிராக டிரம்பின் சட்ட ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டிரம்ப் இந்த எச்சரிக்கையை மீறி இவர்களை மன்னித்து உள்ளார். ஆனால் டிரம்ப் தன்னையோ, தனது குடும்ப உறுப்பினர்களையோ அல்லது தனது வழக்கறிஞரையோ மன்னிக்கவில்லை. இவர்கள் மீதான வழக்கு எப்போதும் போல தொடரும்.

விசாரணை
உதாரணமாக கேப்பிட்டல் கலவரத்தை தூண்டியதாக டிரம்ப் மீது புகார் உள்ளது. இதில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த செனட் விசாரணையில் டிரம்ப் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இனி அவர் தேர்தலிலேயே நிற்க முடியாது. ஆனால் இந்த வழக்கில் டிரம்ப் தன்னை மன்னிக்கவில்லை. பல்வேறு வரி வழக்குகள் உட்பட அனைத்து வழக்கிலும் விசாரணையை எதிர்கொள்ளும் முடிவில் டிரம்ப் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications