எமர்ஜென்சி.. நாடு முழுக்க களமிறக்கப்படும் ராணுவம்! டிரம்ப் திட்டம் இதுதான்! அவரே சொன்ன முக்கிய தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறுபவர்களை வெளியேற்ற டிரம்ப் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தேசிய அவசர நிலையை அறிவித்து ராணுவம் மூலம் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை நாடு கடத்த உள்ளதை டிரம்ப் உறுதி செய்துள்ளார். இதனால் இப்போது அங்கு வசிக்கும் பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸை வீழ்த்தி, அவர் 2வது முறையாக அதிபராகத் தேர்வாகியிருக்கிறார்.

டிரம்ப்: இந்த முறை டிரம்ப் தொடர்ச்சியாகச் சட்டவிரோத குடியேற்றம் குறித்த பிரச்சாரத்தை முன்வைத்தார். பைடன் ஆட்சியில் பல லட்சம் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்து உள்ளதாகவும் இதனால் அமெரிக்காவில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்து இருந்தார். மேலும், தான் ஆட்சிக்கு வந்தால் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்த உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இப்போது அவர் அதிபர் தேர்தலில் வென்றுவிட்ட நிலையில், ஜனவரி மாதம் அதிபராகவும் பதவியேற்க இருக்கிறார். இதற்கிடையே சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை வெளியேற்றத் தனது திட்டத்தை டிரம்ப் உறுதி செய்துள்ளார்.. அதாவது எல்லைப் பாதுகாப்பு தொடர்பாகத் தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து ஆவணமில்லாத சட்ட விரோதமாகப் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதற்கு அமெரிக்க ராணுவத்தைப் பயன்படுத்த உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
திட்டம் என்ன: இதை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பழமைவாதி ஒருவர், "தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்த தயாராகிவிட்டோம். பைடன் காலத்தில் இங்கு வந்து ஆக்கிரமித்தவர்கள் விரைவில் ராணுவம் மூலம் நாடு கடத்தப்படுவார்கள்" என்று பதிவிட்டு இருந்தார். அதைத் தனது பக்கத்தில் பகிர்ந்த டிரம்ப், "ஆம், இது உண்மைதான்" என்று பதிவிட்டுள்ளார்.
சட்டவிரோத குடியேற்றம்: டிரம்ப் கடந்த 2016- 2020 வரை அமெரிக்க அதிபராக இருந்தார். அப்போதே அவர் சட்டவிரோத குடியேற்றம் குறித்துப் பேசி வந்தார். மெக்சிகோ எல்லையில் தான் சட்டவிரோதமாக மக்கள் அதிகம் நுழைகிறார்கள் எனச் சொல்லி, அவர் மெக்சிகோ எல்லையில் சுவரை கூட கட்டியிருந்தார். எல்லையில் சுவர் கட்ட தேவையான நிதியை அந்நாட்டு நாடாளுமன்றம் ஒதுக்காத நிலையில், கடந்த 2017ம் ஆண்டு அவர் அவசர நிலையை அறிவித்து அரசையும் ஷட் டவுன் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, டிரம்ப் இந்த விவகாரத்தில் அவசர நிலையை அறிவிக்கத் தயங்க மாட்டார் என்றே சொல்லப்படுகிறது. அதேநேரம் டிரம்ப் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுத்தால் அது அமெரிக்காவில் வாழும் பல லட்சம் பேரைப் பாதிக்கும். தற்போதைய சூழலில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறி வசிப்பதாகக் கூறப்படுகிறது.
திட்டம் என்ன: அமெரிக்காவுக்குப் போனால் நல்லா செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்து ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் இதுபோல அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைகிறார்கள். பல லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு இடைத்தரகர்களும் இவர்களுக்கு உதவும் நிலையில், ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்கள். இந்தியாவிலும் கூட பல மாநிலங்களில் இருந்து இதுபோல சட்டவிரோதமாக அமெரிக்கா செல்கிறார்கள். சமீபத்தில் கூட இதுபோல சட்ட விரோதமாக அமெரிக்கா சென்றவர்களை அந்நாட்டு அரசு தனி விமானம் மூலம் மீண்டும் இந்தியா அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications