டிரம்ப் சும்மாவே இருக்க மாட்டர் போல.. ஸ்டீல் இறக்குமதி மீதான வரி இரட்டிப்பு! இந்தியாவுக்கு சிக்கல்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் கடந்த சில வாரங்களாக அமைதியாக இருந்த நிலையில், இப்போது மீண்டும் வரியை விதிக்க ஆரம்பித்துவிட்டார். இப்போது அமெரிக்காவில் செய்யப்படும் ஸ்டீல் இறக்குமதி மீதான வரி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா மீதான பாதிப்பு என்ன மாதிரி இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற சமயத்தில் இருந்தே டிரம்ப் இஷ்டத்திற்கு வரிகளை அள்ளி வீசி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் அறிவித்த ரெசிப்ரோக்கல் வரி சர்வதேச அளவில் பேசுபொருள் ஆனது. இருப்பினும், சில காரணங்களால் டிரம்ப் அந்த வரியைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தார்.

மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்
இதற்கிடையே சில வாரங்கள் அமைதியாக இருந்த டிரம்ப் மீண்டும் இப்போது தனது ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார். வெளிநாட்டில் இருந்து செய்யப்படும் ஸ்டீல் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியை இரட்டிப்பாக்குவதாக அவர் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் இப்போது ஸ்டீல் இறக்குமதிக்கு 25% வரி விதிக்கப்படுகிறது. அந்த வரியை இரண்டு மடங்காக அதிகரித்து 50%ஆக உயர்த்த டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். வரும் ஜூன் 4ம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வரும் என அறிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு அறிவிப்பு வெளியாக சில மணி நேரத்திற்கு முன்பு தான் சீனா மீது டிரம்ப் சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதாவது முக்கியமான கனிமங்கள் மீதான வரிகள் மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகளைப் பரஸ்பரம் தளர்த்துவதற்கான ஒப்பந்தத்தைச் சீனா மீறுவதாக டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு சில மணி நேரத்தில் இந்த வரி அறிவிப்பு வந்துள்ளது.
இரட்டிப்பான வரிகள்
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அதிபர் டிரம்ப், இறக்குமதி செய்யப்படும் ஸ்டீலுக்கு வரி விதிக்கப்போவதாக அறிவித்தார். இந்த கூடுதல் வரி உள்நாட்டு ஸ்டீல் உற்பத்தியைப் பாதுகாக்கும் என்றும் அமெரிக்க ஸ்டீல் உற்பத்தியை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும் பேசுகையில், "வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீலுக்கு நாங்கள் கூடுதலாக 25% வரி விதிக்கப் போகிறோம். இதன் மூலம் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் பொருட்களுக்கான வரி 25%ல் இருந்து 50%ஆக உயரும். இது அமெரிக்காவில் ஸ்டீல் தொழிலை மேலும் பாதுகாக்கும்" என்றார்.
சீனா மீது தாக்கு
சீனாவைக் கடுமையாகத் தாக்கி பேசிய டிரம்ப், அமெரிக்காவின் எதிர்காலம் ஷாங்காயிலிருந்து வரும் தரமற்ற ஸ்டீலை நம்பி இருக்கக்கூடாது எனக் குறிப்பிட்ட அவர், அமெரிக்காவின் வலிமையும் பெருமையும் கொண்ட ஸ்டீல் உடனே அமெரிக்காவில் எதிர்காலம் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
உற்பத்தி செலவு அதிகரிப்பதால் பெரும்பாலான தொழில்துறையினர் தங்கள் உற்பத்தியை அமெரிக்காவில் இருந்து வெளியே எடுத்துச் சென்றுவிட்டனர். இருப்பினும், ஸ்டீல், இயற்கை எரிவாயு போன்ற ஓரிரு துறையின் உற்பத்தி மட்டும் அமெரிக்காவில் இன்னும் நடந்து வருகிறது. இதில் ஸ்டீல் ஏற்றுமதியில் அமெரிக்காவுக்குச் சீனா கடும் போட்டி கொடுக்கிறது. சீன ஸ்டீல் விலை குறைவாக இருப்பதால் அமெரிக்காவிலேயே அதற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.
இருப்பினும், இதே நிலை தொடர்ந்தால் சீன ஸ்டீல் இறக்குமதி அதிகரித்து அமெரிக்க ஸ்டீல் துறையே கூட அழியும். இதன் காரணமாகவே டிரம்ப் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் கடந்த ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்த போது தான் ஸ்டீல் இறக்குமதிக்கு 25% வரியை விதித்திருந்தார். இப்போது 4 மாதங்களில் அவர் வரியை இரட்டிப்பாக்கியுள்ளார்.
இந்தியாவுக்குச் சிக்கல் ஏற்படுமா?
அதேநேரம் இந்த வரி விதிப்பால் இந்தியாவுக்குப் பெரிய பாதிப்பு இருக்காது. ஏனென்றால் இந்தியா தனது அண்டை நாடுகளுக்கே ஸ்டீல் ஏற்றுமதியை அதிகம் செய்கிறது. இந்திய ஸ்டீல்கள் அமெரிக்காவுக்குக் குறைந்த அளவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்த கூடுதல் வரியால் இந்தியாவுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படாது.












Click it and Unblock the Notifications