"ஆட்டை கடித்து மாட்டை கடித்து.." திடீரென சொந்த மக்களுக்கு எதிராக ராணுவத்தை இறக்கும் டிரம்ப்? சர்ச்சை
வாஷிங்டன்: ஆட்டை கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களைக் கடிக்கும் கதையாக டிரம்ப் இப்போது மிக மிக சர்ச்சைக்குரிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். அதாவது வாஷிங்டனில் வீடில்லாமல் இருக்கும் அனைவரையும் வெளியேற்றப் போவதாகவும் அதற்கு ராணுவத்தைப் பயன்படுத்தப்போவதாகவும் கூறியிருக்கிறார். இது மட்டுமில்லாமல் அவர்களைச் சிறையிலும் கூட அடைக்கப்போவதாக டிரம்ப் சொல்லியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாகப் பல சர்ச்சை உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளுக்கும் எதிராக டிரம்ப் வரிகளை அறிவித்து வருகிறார். அப்படித் தான் இந்தியாவுக்கு எதிராக டிரம்ப் 50% வரியை அறிவித்துள்ளார். டிரம்பின் இந்த வரி அறிவிப்புகள் சர்வதேச வர்த்தகத்தில் சலசலப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

டிரம்ப் சர்ச்சை உத்தரவு
இப்படி சர்ச்சையைக் கிளப்பிய டிரம்ப் இப்போது அமெரிக்காவிலும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். முதலில் அமெரிக்காவில் இருக்கும் சட்டவிரோதக் குடியேறிகளை நாடுகடத்திய அவர், அடுத்து அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக நுழைந்த வெளிநாட்டினருக்கு எதிராகவும் பல நடவடிக்கைகளை எடுத்தார். ஆட்டை கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கும் கதையாக இப்போது அவர் அமெரிக்க மக்களையும் விட்டுவைக்கவில்லை.
அதாவது உலகில் எந்தவொரு பகுதியாக இருந்தாலும் அங்கு வீடற்ற மக்கள் இருப்பார்கள். இந்த வீடற்ற மக்கள் பெரும்பாலும் யாசகம் கேட்டு அல்லது சின்ன சின்ன வேளைகளைச் செய்து வாழ்க்கையை நடத்துவார்கள். அப்படித் தான் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனிலும் வீடற்ற மக்கள் தங்கியுள்ளனர். அவர்களைத் தலைநகர் வாஷிங்டனில் இருந்து அப்புறப்படுத்தப் போவதாக டிரம்ப் கூறியிருக்கிறார்.
வீடில்லாதவர்களுக்கு எதிராகப் பாய்ச்சல்
இதுபோல வீடில்லாமல் இருக்கும் பலர் அமெரிக்கர்களாக இருக்கும் நிலையில், டிரம்ப் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார். தலைநகர் வாஷிங்டனில் குற்றம் அதிகரிப்பதாகச் சொல்லும் டிரம்ப், இதற்கு இதுபோல வீடற்ற மக்களே காரணம் என்றும் அவர்களை அகற்றப்போவதாகவும் டிரம்ப் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல்ஸ் பக்கத்தில், "வாஷிங்டன் இன்று விடுதலை பெறும்! குற்றம், காட்டுமிராண்டித்தனம், அசுத்தம் மற்றும் குப்பைகள் இல்லாமல் போகும். தலைநகரை மீண்டும் சிறந்த தலைநகராக மாற்றுவேன்! அப்பாவி மக்களை இரக்கமின்றிக் கொல்லும் நாட்கள் முடிந்துவிட்டன! நான் அதிபரான பிறகு விரைவாக எல்லையைச் சரிசெய்தேன்.. அடுத்து தலைநகர் வாஷிங்டன் தான்" என்று பதிவிட்டுள்ளார்.
அடங்காத டிரம்ப்
அதேநேரம் இதற்காக டிரம்ப் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை. இருப்பினும், தேசியக் காவல்படை வீரர்களை வாஷிங்டனுக்கு அனுப்ப டிரம்ப் ரெடியாகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் புலம்பெயர்ந்தோர் போராட்டங்களைக் கையாள டிரம்ப் இந்த முறையைத் தான் பயன்படுத்தினார். இப்போது மீண்டும் அதையே கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
தீவிர ஆலோசனை
அதேநேரம் டிரம்பின் இந்த பிளான் இறுதியாகவில்லையாம். எத்தனை வீரர்களைக் களமிறக்கலாம்.. அவர்களுக்கான மிஷன் என்னவாக இருக்கும் என்பது குறித்து ஆலோசித்து வருவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன. அமெரிக்காவின் இதர மாகாணங்களில் தேசியக் காவல்படையைக் களமிறக்க சம்பந்தப்பட்ட ஆளுநர்களின் அனுமதி தேவை. ஆனால், தலைநகர் வாஷிங்டனில் தேசியக் காவல்படையின் செயல்பாடுகளை அதிபர் நேரடியாகக் கட்டுப்படுத்துகிறார். இதனால் டிரம்ப் எப்போது வேண்டுமானாலும் தேசியக் காவல் படையை இறக்கலாம் எனத் தெரிகிறது.
டிரம்ப் மேலும் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "உங்களுக்குத் தங்குவதற்கு இடங்கள் வழங்குவோம், ஆனால் தலைநகரிலிருந்து வெகு தொலைவில் இருக்கும். குற்றவாளிகளே, நீங்கள் இருக்க வேண்டிய இடம் சிறை தான்.. அதில் உங்களை அடைப்போம்" என்றும் பதிவிட்டிருக்கிறார்.
நேற்மாறாக இருக்கும் உண்மை
அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் குற்றங்கள் அதிகரித்துள்ளன.. அதற்கு வீடற்றவர்களே காரணம்.. இதனால் அவர்களை அகற்றப்போகிறேன் என்கிறார் டிரம்ப். இருப்பினும், வாஷிங்டனில் குற்றங்கள் ஒன்றும் அதிகரிக்கவில்லை என்றும் டிரம்ப் சொல்வதற்கு எந்தவொரு டேட்டாவும் இல்லை என்றும் வாஷிங்டன் மேயர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்
இந்தாண்டின் முதல் ஏழு மாதங்களில் வாஷிங்டனில் வன்முறைக் குற்றங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26% குறைந்ததாகவும், ஒட்டுமொத்தக் குற்றங்கள் சுமார் 7% குறைந்ததாகவும் அங்குள்ள போலீசாரும் விளக்கமளித்துள்ளனர். மேலும், டிரம்ப் இதை எப்படிச் செய்யப்போகிறார் என்பதில் தெளிவற்ற நிலை இருக்கிறது. வாஷிங்டனில் உள்ள பெடரல் அரசு நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் மட்டுமே டிரம்ப் கட்டுப்பாட்டில் வரும். மற்றவை உள்ளூர் நிர்வாகத்தின் கீழ் வரும்.
குற்றம் இல்லை
மேலும், டிரம்ப் வீடற்ற மக்களால் தான் குற்றம் நடப்பதாகச் சொல்கிறார் என்கிறார். ஆனால் டேட்டாவின்படி வாஷிங்டனில் 3,782 தனிநபர்கள் மட்டுமே வீடற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் கூட பெரும்பாலானோர் இரவு நேரங்களில் அவசரத் தங்குமிடங்கள் அல்லது தற்காலிக வீடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications