சீன செயலி "டிக்டாக்" தடையை நீக்க போவதாக டிரம்ப் அறிவிப்பு! திடீர் முடிவுக்கு என்ன காரணம்? ட்விஸ்ட்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் டிரம்ப் டிக்டாக் செயலி தொடர்பாக சில முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்தியாவைப் போலவே அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கிடையே அந்த அறிவிப்பு வந்த சில மணி நேரத்திலேயே டிக்டாக் செயலிக்கான தடையை நிறுத்தி வைக்கப் போவதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டிரம்ப் நாளை பதவியேற்கிறார். இந்திய நேரப்படி திங்கள் இரவு 10.30 மணிக்கு டிரம்பின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில் பல சர்வதேச தலைவர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர்.

அதிபராகப் பதவியேற்ற முதல் நாளே டிரம்ப் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாகச் சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் அவர் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது. இதற்கிடையே டிக்டாக் தடை விவகாரத்தில் டிரம்ப் திடீரென புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டிக்டாக் தடை:
அதாவது பைடன் நிர்வாகம் டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதித்து இருந்த நிலையில், அந்த தடையை நீக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். டிக்டாக் செயலியில் குறைந்தபட்சம் 50% பங்குகளை அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு விற்க வேண்டும் என்ற கண்டிஷன் உடன் தடையை நீக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கும் வகையில் கடந்தாண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்று நிறைவேறியது. டிக்டாக் நிறுவனத்தை மொத்தமாக அமெரிக்க முதலீட்டாளர்களிடம் விற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. அந்தச் சட்டம் பேச்சு உரிமைக்கு எதிராக இருப்பதாகச் சொல்லி டிக்டாக் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பின்னணி:
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்றே தீர்ப்பளித்தது. இதையடுத்து பைடன் நிர்வாகத்தின் உத்தரவால் கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து டிக்டாக் நீக்கப்பட்டது. டிக்டாக் செயலி நீக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே டிரம்ப் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
கண்டிஷன்:
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "அந்த தடை உத்தரவு அமலுக்கு வரும் காலத்தை நீடிக்க ஒரு உத்தரவைப் பிறப்பிக்க உள்ளேன். இதன் மூலம் நமது தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியும். டிக்டாக் ஒரு கூட்டு நிறுவனமாக இருக்க வேண்டும். அதில் குறைந்தபட்சம் 50% பங்குகள் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இதன் மூலம் டிக்டாக் செயலியைக் காப்பாற்ற முடியும். நல்ல உரிமையாளர்களிடம் டிக்டாக்கை இருக்கச் செய்வதன் மூலம், அதைத் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க முடியும்" என்றார்.
என்ன காரணம்:
டிக்டாக் என்பது ஒரு சீன செயலியாகும். டிக்டாக் டேட்டாவை சீன அரசால் அணுக முடியும் என்ற அச்சமே இதற்குக் காரணமாகும். இருப்பினும் அமெரிக்காவில் பல சமூக வலைத்தள பிரபலங்களுக்கு டிக்டாக் செயலியில் இருந்து கணிசமான வருவாய் வருகிறது. டிக்டாக்கை நம்பி பலர் உள்ளனர். இந்தச் சூழலில் டிக்டாக் செயலிக்கு மொத்தமாகத் தடை விதிக்கப்பட்டால் அது அமெரிக்கர்களுக்குப் பாதிப்பு என்பதாலேயே டிரம்ப் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications