“பேச்சுவார்த்தை ஸ்மூத்தாக போகிறது.. நாளை முடிவு தெரியும்!” ஈரான் மேட்டரில் மாற்றி பேசிய டிரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான போர் பதற்றத்தைத் தணிக்க ஒரு புதிய ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஈரானை தாக்குவோம், அழிப்போம் என்றெல்லாம் பேசிய அவர், தற்போது ஒப்பந்தம் குறித்து பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
டிரம்ப், நாளை ஈரான் நாட்டுடன் ஒரு உடன்பாடு ஏற்பட நல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர்கள் இப்போது பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் கடுமையான குண்டுவீச்சைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் ஏற்கனவே கெடு விதித்திருந்தார். ஹார்முஸ் நீரிணை என்பது உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான பாதையாகும். இப்படி வீர வசனம் பேசிவிட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என்று பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
சமீபத்தில் சமூக வலைதளங்களில், ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது கடும் தாக்குதல் நடத்துவோம் என்று டிரம்ப் கடுமையாக எச்சரித்திருந்தார். ஆனால், இப்போது திடீரென பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தம் குறித்துப் பேசியிருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரானிடம் இருந்து சாதகமான பதில் வந்தால், நாளை போர் தவிர்க்கப்படலாம். ஒருவேளை ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், அமெரிக்கா தனது JASSM-ER ரக ஏவுகணைகளைப் பயன்படுத்தித் தாக்குதலைத் தொடங்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications