மோடிக்கு போன் போட்டேன்.. அடுத்த சில மணி நேரங்களில் என்ன நடந்தது தெரியுமா? டிரம்ப் மீண்டும் பரபர பேச்சு
வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட மூன்றாம் தரப்பு நாடுகள் மத்தியஸ்தம் செய்யவில்லை என்று மத்திய அரசு உறுதிபட கூறி வரும் நிலையில், இதற்கு முரண்பாடாக டிரம்ப் பேசி வருகிறார். தனது தலையீட்டின் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக பேசி வரும் டிரம்ப், தற்பொது மோடியிடம் தொலைபேசியில் பேசியதாக புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது. இதனால், கோபம் அடைந்த பாகிஸ்தான், இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.

இந்தியா பாகிஸ்தான் மோதல்
இதனை இந்தியா தனது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் வானிலேயே அழித்தது. பாகிஸ்தானுக்கு பதிலடியாக அந்த நாட்டின் விமானப்படை தளங்கள் மீது இந்திய ஏவுகணைகளை கொண்டு தாக்கியது. இந்தியா நடத்திய பதிலடியால் தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு கெஞ்சியது. இதையடுத்து, மூன்று நாட்களாக நீடித்த இந்த மோதல் முடிவுக்கு வந்தது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தை நானே நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறி வருகிறார். ஆனால், இந்தியா இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இருந்த போதிலும் டிரம்ப் தொடர்ச்சியாக நானே சண்டை நிறுத்தம் செய்ய வைத்ததாக கூறி வருகிறார். வர்த்தகத்தை காரணம் காட்டி நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறி வருகிறார்.
மோடியிடம் பேசினேன்
இதுவரை டிரம்ப் 30-க்கும் மேற்பட்ட முறை கூறி விட்டார். அதேபோல, இந்தியா - பாகிஸ்தான் மோதலில் 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் டிரம்ப் கூறி வருகிறார். இந்தியா இதனை ஏற்க மறுத்தாலும் டிரம்ப் விடாப்பிடியாய் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் சண்டையின்போது இந்திய பிரதமர் மோடியுடன் பேசியதாக கூறி புதிய பரபரப்பை கிளப்பியிருக்கிறார் டிரம்ப்.
வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து டிரம்ப் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:- நான் மிகவும் சிறப்பான நபரான மோடியிடம் பேசினேன். பாகிஸ்தானுடன் என்ன பிரச்சனை போய்க் கொண்டு இருக்கிறது என்று கேட்டேன். இருநாடுகளுக்கும் இடையேயான பகமை மோசமாக இருந்தது. நீண்ட காலம் போகக்கூடியதாக இருந்தது. நான் உங்களுடன் வர்த்தகம் ஒப்பந்தம் செய்ய மாட்டேன் என்று கூறினேன்.
அடுத்த 5 மணி நேரத்தில்
நீங்கள் அணு ஆயுத போரில் முடிக்க போகிறீர்கள். நாளை எனக்கு போன் செய்யுங்கள். ஆனால் உங்களிடம் நாங்கள் (அமெரிக்கா) வர்த்தகம் செய்யப்போவது இல்லை அல்லது அதிக அளவிலான வரியை விதிக்க போகிறோம். உங்கள் தலை சுற்றும் அளவுக்கு இது இருக்க போகிறது" என்றேன். அடுத்த 5 மணி நேரத்தில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. ஒருவேளை அது மீண்டும் தொடங்கலாம், ஆனால் அப்படி தொடங்கினால் நான் அதை நிறுத்துவேன்" என்றார்.
50 சதவிகிதம் வரி விகித்த டிரம்ப்
அதுமட்டும் இன்றி இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது ஏழு போர் விமானங்கள் அல்லது அதற்கும் மேலாக சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என்றார் டொனால்டு டிரம்ப். எனினும், இந்த போர் விமானங்கள் எந்த நாட்டிற்கு சொந்தமானது என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்தியா மீது 50 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார். ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கூறி வந்த டிரம்ப், இந்தியா அதனை ஏற்க மறுத்ததால், இந்த வரி விதிப்பை அமல் செய்துள்ளார். டிரம்ப் விதித்த வரி இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அவரது இந்த பேச்சு புதிய பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.












Click it and Unblock the Notifications