அணு ஆயுத பேரழிவு ஏற்பட்டிருக்கும்.. இந்தியா பாகிஸ்தான் மோதலை தடுத்தது நாங்கள் தான்! டிரம்ப் சர்ச்சை
வாஷிங்டன்: இந்தியா பாகிஸ்தான் இடையே ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு மோதல் வெடித்து இருந்தது. சுமார் 4 நாட்கள் நீடித்த மோதல் பிறகு முடிவுக்கு வந்தது. அதேநேரம் இந்த மோதலை நான் தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என டிரம்ப் போகும் இடமெல்லாம் கூறி வருகிறார். இப்போது மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ள டிரம்ப், அமெரிக்கா தலையிடவில்லை என்றால் அணு ஆயுத பேரழிவு ஏற்பட்டிருக்கும் எனக் கூறியிருக்கிறார்..
இந்தியா பாகிஸ்தான் இடையே இம்மாத தொடக்கத்தில் மோதல் வெடித்திருந்தது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பொறுக்காமல் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. ஒரு கட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யத் தூதுவிட்டது. இதையடுத்து கடந்த 10ம் தேதி மோதல் முடிவுக்கு வந்தது.

டிரம்ப் செய்த காரியம்
அதேநேரம் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததே நான்தான் என டிரம்ப் போகும் இடமெல்லாம் கூறி வருகிறார். இதில் வெளிநாட்டுத் தொடர்பு இல்லை என்பதை இந்தியா திட்டவட்டமாகக் கூறினாலும் கூட டிரம்ப் தொடர்ச்சியாக இதே கருத்துகளைக் கூறி வருகிறார். இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை ஓவல் அலுவலகத்தில் எலான் மஸ்க் உடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் மீண்டும் இந்தியா பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தது நான்தான் எனக் கூறியிருக்கிறார். மேலும், அமெரிக்காவின் தலையீடு காரணமாகவே அணு ஆயுத மோதல் தடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாங்கள் தான் தடுத்தோம்
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிடுவதை நாங்கள் தடுத்தோம். விட்டிருந்தால் அது அணுகுண்டு பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். அதே நாங்கள் வெற்றிகரமாகத் தடுத்தோம். அதேநேரம் பதற்றத்தைத் தணிக்க ஒப்புக்கொண்ட இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இரு நாட்டு நிர்வாகத்திற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அணு ஆயுத பேரழிவு
ஒருவருக்கொருவர் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டு மோதிக் கொண்டு இருப்போருடன் அணுகுண்டை பயன்படுத்தலாம் என்ற நிலையில் இருப்போருடன் நாம் வர்த்தகம் செய்ய முடியாது. அதேநேரம் மோதலை முடிவுக்குக் கொண்டு வர விரும்பி ஒத்துழைத்த இரு நாடுகளுக்கும் நன்றி. அமெரிக்காவின் ராணுவ வலிமை மற்றும் தலைமையை அனைவருக்கும் தெரியும். சர்வதேச அளவில் ஏற்படும் மோதல்களைத் தடுப்பதில் நமக்கு முக்கிய பங்கு இருக்கவே செய்கிறது" என்றார்.
இந்தியா மறுப்பு
அதேநேரம் இந்தியா பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு வந்ததில் வெளிநாடுகளின் தலையீடு எதுவும் இல்லை என்றே இந்தியா கூறி வருகிறது. பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்ததாலேயே மோதல் முடிவுக்கு வந்ததாக இந்தியா கூறி வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் இடையே நேரடி பேச்சுவார்த்தை இருந்ததாகவும் மூன்றாம் தரப்பு யாரும் மத்தியஸ்தம் செய்யவில்லை என்றும் இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும், டிரம்ப் அதையெல்லாம் கேட்பதாக இல்லை. போகும் இடமெல்லாம் இந்தியா பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தது நான்தான் எனக் கூறி வருகிறார். சமீபத்தில் அவர் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது சவுதியில் நடந்த நிகழ்வில் பேசும்போது கூட டிரம்ப் இதே கருத்துகளைக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications