வேலைக்காக அமெரிக்கா போறீங்களா? ஆப்பு வைத்த டிரம்ப்! H-1B விசா கட்டணம் அதிரடியாக உயர்வு
வாஷிங்டன்: அமெரிக்காவில் பணி செய்பவர்கள் H-1B விசாவை பெற வேண்டியது அவசியம். இதற்கு கட்டணம் உண்டு. ஆனால் தற்போது இந்த கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி இருக்கிறார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். இதனால் அமெரிக்காவுக்கு போகும் கணவை இந்தியர்கள் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அதேபோல H-1B விசா மூலம் அமெரிக்காவில் வேலை செய்து வருபவர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
H-1B விசா என்பது அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு தற்காலிக குடியுரிமையாகும். பொறியியல், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல் மற்றும் நிதி போன்ற துறைகளில் திறமையானவர்கள் அமெரிக்காவில் பணியாற்ற விரும்பலாம். அவர்களுக்கு அமெரிக்காவில் தங்கி பணியாற்ற தற்காலிக குடியுரிமை தேவைப்படும். அதற்காகத்தான் இந்த விசா வழங்கப்படுகிறது.

பொதுவாக இந்த விசா மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரை இதை நீட்டிக்க முடியும். இது ஒரு தற்காலிக விசாவாக இருந்தாலும் இதனை வைத்து, கிரீன் கார்டு போன்ற நிரந்தர குடியுரிமையையும் அமெரிக்காவில் பெற விண்ணப்பிக்க முடியும். இப்போது இந்த விசாவின் கட்டணத்தைதான் அமெரிக்கா அதிகரித்திருக்கிறது. புதியதாக விசா பெறுபவர்களும், 3 அல்லது 6 ஆண்டுகளுக்கு பிறகு விசாவை புதுப்பிப்பவர்களும் புதிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.
கட்டணத்தை பொறுத்த வரையில், சுமார் 1 லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.88 லட்சமாகும். இந்த கட்டண உயர்வால் பலரும் அமெரிக்க வேலை என்கிற கனவை இழக்க நேரிடும்.
அமெரிக்காவில் தற்போது உள்ளூர் மக்களுக்கு வேலை என்கிற முழக்கம் தீவிரமடைந்து வருகிறது. அதாவது நம்மூரில், வடமாநில தொழிலாளர்கள் எல்லா வேலைகளையும் ஆக்கிரமித்துவிட்டார்கள் என்று சொல்கிறோமே அதுபோல, அமெரிக்க மக்கள் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் தற்போது விசா கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் குறைந்த ஊதியத்திற்கு இந்தியர்கள் அதிகமான அளவில் வேலை பார்க்கிறார்கள். இந்தியர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் வேலை பார்க்கிறார்கள். அமெரிக்க நிறுவனங்களும் வெளிநாடுகளில் இருந்து திறமையானவர்களை விரும்பி தேர்ந்தெடுக்கிறது. இதற்கு இரண்டு வகையான காரணங்கள் இருக்கின்றன.
முதல் காரணம், ஊதியம் உள்ளிட்ட பண பலன்கள் வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு குறைவாகவே கொடுக்கப்படும். நம்மாட்கள் குறைந்த கூலிக்கு கூட வேலை செய்வார்கள். அமெரிக்க மக்கள் அப்படி கிடையாது. சட்டம் பேசுவார்கள். கொடி பிடிப்பார்கள். இதெல்லாம் கார்ப்பரேட்டுக்கு ஒத்துவராது.
இரண்டாவது காரணம், அமெரிக்காவில் உள்நாட்டு தொழிலாளர்களை வேலை எடுக்கும் போது, தொழிலாளர் உரிமை தொடர்பான அனைத்து நிபந்தனைகளையும் நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டியது வரும். ஆனால், வெளிநாடுகளில் இருந்து ஆட்களை வேலை கெடுக்கும் போது அப்படி இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
எனவே லாப நோக்கம் கருதி வெளிநாடுகளில் இருந்து திறமையானவர்களை அமெரிக்கா நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துகின்றன. இப்போது உள்ளூர் மக்கள் தங்களுக்கு வேலை வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் விதமாக டிரம்ப் தலைமையிலான அரசு இந்த விசா கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் வந்து வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று அமெரிக்க அரசு நம்புகிறது.
அமெரிக்க குடியரசு கொள்கையை மறுசீரமைக்கும் நோக்கில் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருக்கிறார். வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த நிகழ்வில் இது தொடர்பான உத்தரவுக்கு டிரம்ப் கையெழுத்து போட்டிருக்கிறார்.
வெள்ளை மாளிகையின் ஊழியர் செயலாளர் இது பற்றி கூறுகையில், "H-1B விசா என்பது அமெரிக்க மக்களால் செய்ய முடியாத வேலையை செய்யும் நபர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான். நமக்கு சிறந்த தொழிலாளர்கள் தேவை. அந்த வகையில் தற்போது மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் விசா கட்டணம், சிறந்த தொழிலாளர்கள் மட்டுமே நமக்கு கிடைப்பதை உறுதி செய்யும்" என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்க தொழிலாளர்களுக்கு மாற்றாக வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்கள் கொண்டுவரப்படுவது தடுக்கவும், சுமார் 100 மில்லியன் டாலர் வருவாய்க்காகவும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் ஏறத்தாழ 5 லட்சம் பேர் H-1B விசாவை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் இந்த கட்டண உயர்வு பாதிக்கும்.
இவர்களில் பெரும்பாலானோர் நிரந்தர குடியுரிமைக்காக நீண்ட காலமாக விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் குடியுரிமை கிடைக்கவில்லை. அப்படியான நபர்களும் இந்த கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications