"25% வரி.." ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு டிரம்ப் போட்ட உத்தரவு.. இந்தியாவுக்கு சிக்கல்?
வாஷிங்டன்: ஈரான் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் பல வன்முறைச் சம்பவங்களும் ஏற்பட்ட நிலையில், நிலைமை மோசமாகவே இருக்கிறது. இந்தச் சூழலில் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்தார்.
ஈரான் நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. அங்குள்ள கமேனி அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம் பல நாட்களாகத் தொடர்ந்து வருகிறது. இந்தப் போராட்டங்களில் குறைந்தது 648 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. போராட்டக்காரர்களை ஒடுக்கும் முயற்சியில் ஈரான் அரசு ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஈரான்
அமைதியாகப் போராடுவோர் மீது வன்முறையை ஈரான் அரசு ஏவியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதற்கிடையே இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமைதியான முறையில் போராடுவோருக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தினால் அமெரிக்கா நிச்சயம் தலையிடும் என்று டிரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தச் சூழலில் தான் ஈரான் அரசுக்கு பிரஷர் போடும் வகையில் டிரம்ப் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ஈரான் உடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் 25% வரி விதிக்கப்படும் எனத் தடாலடியாக அறிவித்துள்ளார். அதாவது ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள், அமெரிக்கா உடனும் வர்த்தகம் செய்யும்போது கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என்பதே அதன் உத்தரவின் நோக்கம்.
25% வரி
இது தொடர்பான அறிவிப்பை டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், "ஈரான் அரசுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் வணிகத்திற்கு 25% சுங்க வரி செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த வரி அமலுக்கு வரும்போது இதனால் எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படும் என்பதை டிரம்ப் அறிவிக்கவில்லை. மேலும், மனிதாபிமான மற்றும் மருந்துகள் உள்ளிட்ட முக்கியமான வர்த்தகத்திற்கு விலக்குகள் இருக்குமா என்பது குறித்தும் டிரம்ப் எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.
யாருக்குப் பாதிப்பு?
அதேநேரம் ஈரானுடன் அதிக வர்த்தகம் செய்யும் நாடுகளாக இந்தியா, துருக்கி, சீனா, அமீரகம் போன்ற நாடுகள் உள்ளன. இதனால் இந்த நாடுகளுக்குக் கூடுதல் வரி விதிக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. ஈரானில் கிட்டத்தட்ட எல்லாப் பகுதிகளிலும் மிகப் பெரியளவில் போராட்டங்கள் வெடித்துள்ள சூழலில், டிரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஈரானில் என்ன நிலைமை?
ஈரான் போராட்டங்களில் வன்முறை அதிகரித்துள்ளது குறித்து நார்வேயை சேர்ந்த ஈரான் மனித உரிமைகள் குழு கவலை தெரிவித்துள்ளது. ஈரான் போராட்டங்களின் குறைந்தது 648 பேர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம் உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஈரான் இதுவரை வெளியிடவில்லை. போராட்டங்களில் வன்முறைச் சம்பவங்களுக்கு வெளிநாட்டுத் தலையீடே காரணம் என ஈரான் குற்றம்சாட்டியது. போராட்டத்தில் ஈடுபடுவோரைத் தீவிரவாதிகள் என்ற ஈரான் அரசு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் அவர்களை ஆதரிப்பதாக சாடியது.
இதற்கிடையே, ஈரானில் தொடரும் போராட்டங்களுக்கிடையே, அதன் தலைமையைக் குறிவைக்கும் வகையில் ராணுவ நடவடிக்கையை எடுக்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க எம்பி லிண்ட்சே கிரஹாம் கோரிக்கை வைத்துள்ளார். ஈரான் மீதான டிரம்ப் நடவடிக்கைகளை பாராட்டிய அவர், ஈரான் ரெட் லைனை தாண்டிவிட்டதாகவும் அவர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications