"ஏலியன்" சட்டம்.. டிரம்ப் எடுத்த மேஜர் ஆயுதம்! யார் வெளியேற்றப்படுவார்கள்? இந்தியர்களுக்கு ஆபத்தா?
வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், ஏலியன் எனிமி சட்டம் மூலம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கப் போவதாக அறிவித்தார். மேலும், நாட்டின் தெற்கு எல்லையில் எமர்ஜென்சியையும் அவர் அறிவித்துள்ளார். 1798ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த ஏலியன் எனிமி சட்டம் என்றால் என்ன.. இதனால் இந்தியர்களுக்குப் பிரச்சினை வருமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் இன்று அதிகாரப்பூர்வமாக அந்நாட்டு அதிபராகப் பதவியேற்றார். பதவியேற்ற பிறகு நாட்டு மக்களிடையே பேசிய டிரம்ப் பல அதிரடி கருத்துகளைக் குறிப்பிட்டார்.

டிரம்ப் அதிரடி:
அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராகவே பேசி வந்த அவர், அதிபராகப் பதவியேற்ற உடனே அதற்கு எதிராக நடவடிக்கையைத் தீவிரப்படுத்தப் போவதாகக் கூறி வந்தார். அவர் சொன்னது போலவே முதல் நாளே அமெரிக்காவின் தெற்கு எல்லையை டிரம்ப் அவசர நிலையை அறிவித்துள்ளார். மேலும், சட்டவிரோதமாக நாட்டில் குடியேறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்த உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
ஏலியன் எனிமி சட்டம்:
மேலும், சட்டவிரோதமாக நாட்டில் குடியேறியவர்களை நாட்டில் இருந்து வெளியேற்ற ஏலியன் எனிமி சட்டத்தைப் பயன்படுத்த உள்ளதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார். அது என்ன ஏலியன் எனிமி சட்டம். இதன் மூலம் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை எப்படி வெளியேற்ற முடியும். இதனால் அங்குள்ள இந்தியர்களுக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த ஏலியன் எனிமி சட்டம் என்பது 1798ஆம் ஆண்டு அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது. இந்த விதியின் கீழ் அமெரிக்கா எதாவது ஒரு நாட்டுடன் போரிட்டு வந்தால் அந்த குறிப்பிட்ட அந்த நாட்டை சேர்ந்தவர்களைக் கைது செய்வதற்கும், நாடு கடத்துவதற்கும் அதிபருக்கு அதிகாரம் வழங்கப்படும். இது முன்பு அங்குத் தேச துரோகச் சட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
சட்டம் சொல்வது என்ன:
18ம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவுக்கும் பல நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்த சூழலில், அப்போது நிலைமையைச் சமாளிக்க இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் படி அமெரிக்கா எந்த நாடுகளுக்கு எதிராகப் போரிடுகிறதோ.. அந்த குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை அதிபர் நினைத்தால் அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற முடியும். தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் வெளிநாட்டினருக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை இந்த சட்டம் அதிபருக்கு வழங்குகிறது.
போர் காலகட்டத்தில் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. போர் பதற்றம் முடிந்தாலும் சட்டம் அப்படியே இருந்துவிட்டது. அதைத் தான் இப்போது டிரம்ப் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். அதேநேரம் போர்க் காலத்தில் பயன்படுத்தக் கொண்டு வந்த சட்டத்தை டிரம்ப் இப்போது எப்படிப் பயன்படுத்தலாம் என்ற சந்தேகம் வரலாம். இந்த சட்டத்தைப் போர்க் காலத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இதன் காரணமாகவே டிரம்ப் இப்போது அந்த சட்டத்தைப் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
காரணம் இதுதான்:
இந்த சட்டத்தைப் பயன்படுத்தப் போவதை மனதில் வைத்தே டிரம்ப் தொடக்கம் முதலே புலம்பெயர்ந்தோரை "படையெடுப்பார்கள்" என்று குறிப்பிட்டு வந்தார். மேலும், எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தொடர்ச்சியாகப் படையெடுப்பு என்று சொல்லி வந்தார். அமெரிக்காவைப் போதைப்பொருள் கடத்தல், கேங் கலாச்சாரம் ஆகியவற்றில் இருந்து காப்பாற்ற ஏலியன் எனிமி சட்டத்தை டிரம்ப் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்தியர்களுக்குப் பாதிப்பா?
சரி, இந்த எலியன் எனிமி சட்டத்தால் அங்குள்ள இந்தியர்களுக்குப் பிரச்சினை வருமா! நிச்சயம் வராது. சட்ட விரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிராக மட்டுமே இந்த சட்டம் பயன்படுத்தப்படும். முறையான விசா வாங்கி அமெரிக்காவுக்குள் சென்ற இந்தியர்களுக்கு இதனால் எந்தவொரு பிரச்சினையும் வராது.












Click it and Unblock the Notifications