மருந்துகளுக்கு 100%.. சமையல் பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி.. மீண்டும் அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்
வாஷிங்டன்: இந்தியா மீது ஏற்கனவே 50 சதவீதம் வரி உயர்வை சுமத்தி நெருக்கடி கொடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரியும், சமையல் அலமாரி உள்ளிட்ட பொருட்களுக்கு 50 சதவீதம் வரியும் விதித்து அறிவித்துள்ளார். அதனுடன் மேலும் சிலவற்றுக்கு வரி உயர்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து தாறுமாறாக முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் பாதிப்புகள் நிலவிக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக இந்தியாவை குறிவைத்து அதிகளவு நடவடடிக்கை எடுத்து வருகிறார். விசா விவகாரம் தொடங்கி வரி உயர்வு வரை ழுல நடவடிக்கைகளை எடுத்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கிறார்.

மருந்துகளுக்கு 100% வரி
இந்தியாவுடன் நட்பு நாடாக இருந்து அதில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், டிரம்ப் மறுபக்கம் பாகிஸ்தான் நாட்டுடன் நட்பு பாராட்டி வருகிறார். சமீபத்தில் ஹெச் 1 பி விசாவில் டொனால்ட் டிரம்ப் அறிவித்த அதிரடி மாற்றங்கள் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிபராவதற்கு முன்பு டிரம்புடன் நெருக்கமாக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளிட்டோரே அவருடன் கருத்து வேறுபாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.
டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை அதிகாலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அக்டோபர் 1 ஆம் தேதி முதல் எந்த ஒரு வெளிநாட்டு பிராண்ட் மற்றும் காப்புரிமை பெறப்பட்ட மருந்துகளுக்கான வரி 100 சதவீதம் வரி விதிக்கப்படும். அமெரிக்காவில் மருந்து உற்பத்தி ஆலையைக் கட்டாத எந்தவொரு பிராண்ட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்து நிறுவனத்திற்கும் 100 சதவீதம் விதிக்கப்படும்.
சமையல், குளியலறை பொருட்களுக்கும்
ஆனால் அந்த நிறுவனம் உற்பத்தி ஆலையை கட்டிக் கொண்டிருந்தால் வரி விதிக்கப்படாது. அடிக்கல் நட்டிருந்தாலோ, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தாலோ கூட இது பொருந்தும்." என்று கூறியுள்ளார். "மேலும், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சமையலறை அலமாரிகள் மற்றும் குளியலறை மேஜை உள்ளிட்ட அலங்காரப் பொருட்களுக்கு 50 சதவீதம் விரி விதிக்கப்படும்.
மெத்தை உள்ளிட்ட மென்மையான அலங்காரப் பொருட்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும். மற்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் அலமாரிகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் அமெரிக்கா சந்தையில் அதிகளவு புகுத்தப்படுகிறது. இது நியாயமான நடைமறை இல்லை. எனவே தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கனரக டிரக்குகளுக்கும்
அதனுடன் அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் கனரக டிரக்குகளுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும். இதன் மூலம் உள்நாட்டில் உள்ள மிகப்பெரிய கனரக டிரக் உற்பத்தியாளர்களுக்கு வரும் போட்டி குறையும் என எதிர்பார்க்கிறோம். நாட்டின் பாதுகாப்பு மற்றும் கனரக டிரக் உற்பத்தியாளர்கள் பொருளாதார ரீதியாக வளமாகவும், வலிமையாகவும் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது."
இந்த அறிவிப்பு உலகளவில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவும் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளில் 50 சதவீதம் அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்படும் என்று மருந்து உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications