"மரியாதை கொடுங்க.. இல்லைனா கூடுதல் வரி விதிக்கப்படும்.." பகிரங்கமாக மிரட்டிய அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது தொடர்ச்சியாக வரிகளை விதித்து, சர்வதேச வர்த்தகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். இதற்கிடையே அமெரிக்க டெக் நிறுவனங்கள் மீதான வரியை உலக நாடுகள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இல்லையென்றால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் தாறுமாறாக வரிகளை விதித்து வருகிறார். ஏற்கனவே இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது டிரம்ப் வரிகளை அறிவித்திருக்கிறார். இந்தியா மீதான அமெரிக்காவின் 25% வரி ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்ட நிலையில், கூடுதல் வரி நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் வரி மிரட்டல் கொடுத்திருக்கிறார்.

கடும் கட்டுப்பாடுகள்
அதாவது அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக வரிகளை விதிக்கும் நாடுகளுக்குக் கடுமையான வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக எச்சரித்துள்ளார். மேலும், அமெரிக்க டெக் நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நாடுகளுக்குப் பதிலடியாக அமெரிக்க நிறுவனங்களின் சிப் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது எந்த நாடுகள் எல்லாம் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரி விதிக்கிறதோ.. அவர்களுக்கு சிப் கொடுக்க மாட்டாராம். இந்த நவீனக் காலத்தில் சிப் ரொம்பவே முக்கியமானதாக இருக்கும் சூழலில், டிரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.
டிரம்ப் அழுத்தம்
அமெரிக்க டெக் நிறுவனங்கள் மீது உலக நாடுகள் விதிக்கும் வரிகளை ரத்து டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆல்பாபெட், மெட்டா, அமேசான் போன்ற மிகப் பெரிய டெக் நிறுவனங்களுக்கு மட்டுமே வரிகள் விதிக்கப்படும் நிலையில், அதைத் தடுக்கவே டிரம்ப் இப்போது மீண்டும் பதிலடியாக வர்த்தகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனப் பேச ஆரம்பித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தாக்கும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபராக நான் நிற்பேன்.. டிஜிட்டல் வரிகள், டிஜிட்டல் சேவைகள் சட்டம் மற்றும் டிஜிட்டல் சந்தை விதிமுறைகள் அனைத்தும் அமெரிக்கத் தொழில்நுட்பத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதற்கோ அல்லது பாகுபாடு காட்டுவதற்கோ வடிவமைக்கப்பட்டுள்ளன. சீனாவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இது ஒரு சலுகையாகவும் உள்ளது. இது இப்போதே முடிவுக்கு வர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா எடுத்த முடிவு
வரிகளைத் தளர்த்தாத நாடுகளுக்குத் தொழில்நுட்பம் மற்றும் சிப்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் அமல்படுத்துவோம் என்று டிரம்ப் அறிவித்தார். டிரம்ப் மேலும், "அமெரிக்காவையும், அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களையும் இனியும் துச்சமாகக் கருத முடியாது. அமெரிக்காவையும், எங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களையும் மதியுங்கள், இல்லையெனில் அதன் விளைவுகளைச் சந்தியுங்கள்!" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து ஒரு ஒப்பந்தம் போட்டன. அதில் நியாயமற்ற வர்த்தகத் தடைகளை நீக்க இரு தப்பும் முடிவு செய்தன. குறிப்பாக மின்னணு பரிமாற்றங்களுக்குக் கட்டண வரி விதிக்க மாட்டோம் கூட்டறிக்கையும் வெளியிட்டன. இதேபோன்ற ஒரு நடைமுறைகளைத் தான் டிரம்ப் இதர நாடுகளிடமும் எதிர்பார்க்கிறார். அதற்காகவே மிரட்டலும் விடுத்திருக்கிறார்.
மிக முக்கிய பிரச்சினை
டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு டிஜிட்டல் வரிகள் ஒரு முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. அமெரிக்காவின் அண்டை நாடான கனடா டிஜிட்டல் வரியை நீக்க மறுத்தது. இதற்காக ஜூன் மாதம், அமெரிக்கா கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் நிறுத்துவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications