"டெஸ்லா மீது கை வைத்தால் 20 ஆண்டுகள் சிறையில் தள்ளிவிடுவேன்!" அதிபர் டிரம்ப் தடாலடி.. என்ன மேட்டர்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்பின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இப்போது எலான் மஸ்கும் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே டெஸ்லா கார்கள் மீது தாக்குதல் நடத்துவோரை 20 ஆண்டுகள் சிறையில் தள்ளவுள்ளதாக எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். டிரம்பின் இந்த பேச்சு அங்கு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் அங்குப் பல நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். குறிப்பாக அங்கு மின்சார கார்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. மின்சார கார்கள் ஓட்டுவது போர் அடிக்கும் என்பதை மாற்றியதில் டெஸ்லாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

எலான் மஸ்க்
இதற்கிடையே எலான் மஸ்க் கடந்தாண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். வெறுமன ஒரு ட்வீட் உடன் அவர் தனது ஆதரவை நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக ஒவ்வொரு ஊராக இறங்கி டிரம்பிற்கு பிரச்சாரம் செய்தார். இதற்கு அங்கு நல்ல வரவேற்பும் இருந்த நிலையில், தேர்தலிலும் டிரம்ப் வெல்ல இது உதவியது.
இதன் காரணமாகவே இப்போது டிரம்பின் நெருங்கிய நட்பு வட்டாரத்திலும் கூட எலான் மஸ்க் இருக்கிறார். மேலும், எலான் மஸ்க்கை டிரம்ப் தனது நிர்வாகத்திலும் சேர்த்துக் கொண்டார். அதில் எலான் மஸ்கிற்கு அரசு செலவுகளைக் குறைக்கும் டாஜ் (DOGE) துறையை ஒதுக்கினார் டிரம்ப். இங்கு தான் எலான் மஸ்கிற்கு பிரச்சினை ஆரம்பித்தது. டாஜ் துறையில் அமெரிக்க அரசின் செலவுகளைக் குறைக்கிறேன் என்று எலான் மஸ்க் ஏகப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
விழுந்த அடி
இது எலான் மஸ்கின் இமேஜை கடுமையாக பாதித்துள்ளது. மேலும், அவரது நிறுவனங்களையும் கூட கடுமையாகப் பாதிக்கிறது. குறிப்பாக டெஸ்லா கார் ஷோரூம்கள் முன்னால் போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும், #TeslaTakedown என்ற முழக்கத்தோடு டெஸ்லா கார்கள் மீதும் தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் அஞ்சும் டெஸ்லா கார் உரிமையாளர்கள், "எலான் மஸ்க் டிரம்ப் உடன் சேரும் முன்பே இந்த டெஸ்லாவை வாங்கிவிட்டேன்" என ஸ்டிக்கர் ஒட்டும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது.
டிரம்ப் எச்சரிக்கை
எலான் மஸ்கிற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், டெஸ்லா கார்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இதற்கிடையே டெஸ்லாவுக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் குரல் கொடுத்துள்ளார். டெஸ்லா கார்களை தாக்குவோர் சிறையில் தள்ளப்படுவார்கள் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "எலான் மஸ்க் மற்றும் டெஸ்லாவை குறிவைத்துத் தாக்கும் பயங்கரவாத ரவடிகளுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை கிடைப்பதைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒருவேளை அவர்கள் எல் சால்வடாரில் உள்ள சிறைகளுக்குக் கூட செல்லக்கூடும். எல் சால்வடார் சிறைகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் அவ்வப்போது இதுபோல எதாவது நடந்து கொண்டு தான் இருக்கும். ஆனால், இதற்கு அமெரிக்க அதிபர் பதவியில் இருக்கும் டிரம்பே நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இது எலான் மஸ்கிற்கு டிரம்ப் எந்தளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதையே காட்டுகிறது.
முதல்முறை இல்லை
அதேநேரம் எலான் மஸ்கிற்கு வெளிப்படையாக டிரம்ப் ஆதரவாக இருப்பது இது முதல்முறை இல்லை. எலான் மஸ்கின் டெஸ்லா பங்குகள் மதிப்பு சுமார் 50% வரை சரிந்துள்ள நிலையில், வெள்ளை மாளிகையில் வைத்து டெஸ்லா காரை வாங்கி டிரம்ப் தனது வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். மேலும், டெஸ்லா பங்குகளிலும் கூட முதலீடு செய்யலாம் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications