இடியைத் தூக்கி போட்ட ட்ரம்ப்.. ஈரானுக்கு குறுக்கே கோட்டைச்சாமி! ஒரே ஒரு வார்த்தையால் எகிறும் பிரஷர்!
வாஷிங்டன்: உலக எண்ணெய் வர்த்தகத்தில் மிக முக்கியமான கடல் வழித்தடமாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்துகள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க கடற்படையின் அனுமதியின்றி எந்த கப்பலும் ஹார்முஸ் ஜலசந்திக்குள் இனி நுழைய முடியாது என்று அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பல நாடுகள் கவலையில் ஆழ்ந்துள்ளன.
சமீப மாதங்களில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், அதற்கு பதிலடியாக ஈரானும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மோதல் காரணமாக உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஹார்முஸ் ஜலசந்தி
உலகளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும் கப்பல்களில் பெரிய பகுதி இந்த ஜலசந்தி வழியாகவே செல்லும். அதனால், இந்த வழித்தடம் தற்காலிகமாக மூடப்பட்டதும் உலக சந்தைகளில் பதற்றம் அதிகரித்தது. எண்ணெய் விலை உயர்வு பற்றிய அச்சமும் பல நாடுகளில் ஏற்பட்டது. இந்த பதற்றமான சூழ்நிலை ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த நிலையில், பல நாடுகள் சமரச முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் முன்னெடுத்த முயற்சிகளின் பின்னர், இரு தரப்பும் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது.
அமைதி பேச்சுவார்த்தை
அதனைத் தொடர்ந்து இஸ்லாமாபாத் நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. அந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க தரப்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா தலைமையிலான குழுவும் பங்கேற்றனர். இருப்பினும் அந்த பேச்சுவார்த்தையில் எந்த முக்கிய உடன்பாடும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.
போர் நிறுத்தம்
இதற்கிடையில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஈரானின் கடல்சார் பகுதிகளில் கண்காணிப்பை தொடரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு செல்ல முயன்ற சில கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க கடற்படை
ஈரான் அரசியல் அமைப்பில் குழப்பம் நிலவுவதாகவும், அந்நாட்டில் கடும்போக்காளர்கள் மற்றும் மிதவாதிகள் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், "ஹார்முஸ் ஜலசந்தி மீது அமெரிக்கா முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்க கடற்படையின் அனுமதியின்றி எந்த கப்பலும் உள்ளே நுழையவோ வெளியேறவோ முடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் கடற்படைகள்
அதுமட்டுமல்லாமல், ஈரான் கடற்படைகள் கடலில் கண்ணிவெடிகள் பதிக்கும் முயற்சிகளை மேற்கொண்டால், அவற்றை உடனடியாக சுட்டு வீழ்த்த அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கடலில் பதிக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை வேகப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான்
மேலும் வெளியிட்ட மற்றொரு பதிவில், ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவுக்கு எந்த அவசரமும் இல்லை என்றும், ஆனால் ஈரானுக்கு கால அவகாசம் குறைந்து கொண்டே வருவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த கருத்துகள், எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.














Click it and Unblock the Notifications