BRICS-க்கு டிரம்ப் மிரட்டல்! எங்களுக்கு எதிராக செயல்பட்டால் 10% கூடுதல் வரி போடுவோம் என எச்சரிக்கை
வாஷிங்டன்: பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் முக்கிய தீர்மானம் ஒன்று போடப்பட்டிருக்கிறது. இதில் அமெரிக்கா மறைமுகமாக சாடப்பட்டிருக்கிறது. இந்நிலையில், எங்களுக்கு எதிராக செயல்பட்டால் 10% கூடுதல் வரி போடுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதனால் இந்தியா சிக்கலில் இருக்கிறது.
தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில், "பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுக்கு எந்த நாடு உடன்பட்டாலும், அவர்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும். இந்த கொள்கையில் எந்த விதிவிலக்கும் இருக்காது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரேசிலில் நேற்று தொடங்கிய பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு இன்று நிறைவடைகிறது. முன்னதாக நேற்று மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் போடப்பட்டன. இது பிரகடனமாக அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது. அதில்,
"ஒரு நாடு, மற்ற நாடுகளுடன் கலந்தாலோசிக்காமல் அல்லது சர்வதேச வர்த்தக விதிகளைப் பின்பற்றாமல், தானாகவே விதிக்கும் இறக்குமதி வரிகள். வரிகள் அல்லாத பிற கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகப் போட்டியைப் பாதித்து, உலகளாவிய வர்த்தக முறையைச் சிதைக்கின்றன" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதால் இந்தியாவுக்கும் கூடுதல் வரி விதிக்கப்படுமோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. ஏற்கெனவே இந்தியாவுக்கு 26+10 என மொத்தம் 36% அளவுக்கு வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த வரி 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஜூலை 9ம் தேதியுடன் இந்த காலக்கெடு முடிவடைகிறது. இதற்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட தயாராகிவிட வேண்டும். இல்லையெனில், வரி நீடிக்கும். இப்படியான நெருக்கடியான சூழலில்தான் பிரதமர் மோடி, பிரிக்ஸ் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவின் மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், காலக்கெடு நெருங்கும்போது நிச்சயம் மோடி, அமெரிக்காவிடம் சரணடைவார் என்று ராகுல் காந்தி அடித்து கூறியுள்ளார். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.
ஏன் பிரிக்ஸ் மீது டிரம்புக்கு கோபம்?
அமெரிக்க டாலர்தான் உலக வர்த்தகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. இதற்கு எதிராக ஒரு வலுவான கரன்சியை உருவாக்க பிரிக்ஸ் முயன்று வருகிறது. பிரிக்ஸ் கரன்சி என்கிற பெயரில், அனைத்து நாடுகளின் சின்னங்களையும் பொறித்த ஒரு கரன்சியை உருவாக்க ஐடியா இருக்கிறது. ஆனால் இந்த ஐடியாவை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. பிரிக்ஸ் கரன்சி வந்தால், பிரிக்ஸில் உறுப்பினராக உள்ள 10 நாடுகளும் இந்த கரன்சியை ஏற்றுக்கொள்ளும்.
இந்த கரன்சியை வைத்து இந்த நாடுகளிடையே நம்மால் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். அதேபோல பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனியாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை உருவாக்கவும் பிரிக்ஸ் நாடுகள் முயற்சித்து வருகின்றன. பிரிக்ஸில் சீனா, ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. ஆக இதெல்லாம்தான் இந்த அமைப்பின் மீதான் டிரம்பின் கோபத்திற்கு காரணம்.












Click it and Unblock the Notifications