வெனிசுலாவோடு நிற்காது? டிரம்பின் அடுத்த டார்கெட் இந்த "இரு" நாடுகள் தான்! நேரடி எச்சரிக்கை
வாஷிங்டன்: வெனிசுலாவில் தாக்குதலை நடத்திய அமெரிக்கா அந்நாட்டின் அதிபரை நாடு கடத்தியுள்ளது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள போதிலும், இத்தோடு அமெரிக்கா தனது நடவடிக்கைகளை நிறுத்தாது என்றே தெரிகிறது. டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தில் இருக்கும் மூத்த அமைச்சர்கள் அமெரிக்காவின் அடுத்த டார்கெட் குறித்துக் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
வெனிசுலாவில் அமெரிக்கா "ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்" என்ற ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தியது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நியூயார்க்கில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்து கொலம்பியா?
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "அவர் (கொலம்பியா அதிபர்) கோகோயின் தயாரித்து அமெரிக்காவிற்கு அனுப்புகிறார். அதனால் அவர் கவனமாக இருக்க வேண்டும்" என்று நேரடியாக எச்சரித்தார். இதற்குப் பதிலளித்த பெட்ரோ, தனது நெருங்கிய நண்பரான மதுரோவை நேரடியாகக் குறிப்பிடாமல், அமெரிக்காவின் நடவடிக்கைகளை லத்தீன் அமெரிக்காவின் இறையாண்மை மீதான தாக்குதல் என விமர்சித்தார். இவை மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொலம்பியாவில் போதைப்பொருள் உற்பத்தி ஆய்வகங்கள் இயங்கி வருவதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் டிரம்ப், தேவை என்றால் அந்த ஆய்வகங்கள் மீதும் கூட தாக்குதல் நடத்த உத்தரவிடுவேன் என டிரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார். இதை மிகக் கடுமையாகச் சாடிய அதிபர் பெட்ரோஸ இதனை ஒரு படையெடுப்பு அச்சுறுத்தல் எனக் கடுமையாகக் கண்டித்திருந்தார்.
அமெரிக்காவே நிர்வகிக்கும்
வெனிசுலா தலைநகர் கராகஸிலிருந்து மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் நாடுகடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அமெரிக்கா தற்காலிகமாக வெனிசுலாவை நிர்வகிக்கும் என்று டிரம்ப் அறிவித்தார். "பாதுகாப்பான, சரியான மற்றும் நியாயமான மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும் வரை நாட்டை வழிநடத்துவோம்" என்று அவர் கூறினார். தேவைப்பட்டால் இரண்டாவது, இன்னும் பெரிய தாக்குதலை நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
அடுத்து என்ன!
டிரம்ப் மேலும் பேசுகையில், "நாங்கள் நல்ல அண்டை நாடுகளுடன் இருக்க விரும்புகிறோம். நிலைத்தன்மையுடன், நல்ல நிலையில் உள்ள நாடுகளுடன் இருக்க விரும்புகிறோம். வெனிசுலாவை பொறுத்தவரை அங்கு அபரிமிதமான ஆற்றல் உள்ளது. அதனைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். அங்குத் துணை அதிபராக இருக்கும் டெல்சி ரோட்ரிகஸ் வெனிசுலாவை மீண்டும் மகத்தானதாக மாற்றுவார் என நம்புகிறோம். அங்கு எதிர்க்கட்சித் தலைவராக உள்ள மரியா கொரினா மச்சாடோவுக்கு போதிய ஆதரவு இருப்பது போலத் தெரியவில்லை. அவர் வெனிசுலா தலைவராக வருவது மிகவும் கடினமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலா சென்று, பில்லியன் டாலர்களை செலவழித்து, சேதமடைந்த எண்ணெய் உள்கட்டமைப்பைச் சரிசெய்யும். இதன் மூலம் அமெரிக்காவுக்கான வருவாய் கிடைக்கும். அமெரிக்கக் கோரிக்கைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படும் வரை, அனைத்துப் படைகளும் அங்கேயே இருக்கும்" என்றார்.
கியூபா
வெனிசுலாவுக்கு பிறகு அடுத்து டிரம்ப் நிர்வாகம் கியூபா பக்கம் தனது கவனத்தைத் திருப்பும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, "நான் கியூபா அதிபராக இருந்திருந்தால் நிச்சயம் அமெரிக்காவின் நடவடிக்கைகளைப் பார்த்துப் பயந்து போய் இருப்பேன்" என்று மறைமுகமாக அமெரிக்காவின் அடுத்த டார்கெட்டாக கியூபா இருக்கலாம் என்பதைத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications