தங்கத்தை விடுங்க.. டிரம்ப் உத்தரவால் பிட்காயினை வாங்கி குவிக்கும் அமெரிக்கா ! இனி ரேட் பறக்க போகுது
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து தங்கத்தைப் போலவே பிட்காயினையும் கையிருப்பாக வாங்கி வைக்கும் நடவடிக்கைகளை அமெரிக்க பெடரல் வங்கி தொடங்கியுள்ளது. இதனால் பிட்காயின் அடுத்த தங்கமாக மாறுமா என்ற கேள்வி பலருக்கும் வந்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் அதிபரான போதே தான் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதனால் அப்போதே பிட்காயின் மதிப்பு புதிய உச்சம் தொட்டது. அடுத்த கட்ட நடவடிக்கையாக இப்போது பிட்காயினை இருப்பு வைக்கும் நடவடிக்கையை எடுக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

தங்கம்
பொதுவாக அனைத்து உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகத் தங்கத்தைக் கையிருப்பாக வாங்கிக் குவிக்கும். பொருளாதார சிக்கல் ஏற்படும் போது தங்கம் தான் காப்பாற்றும் என்பதால் உலக நாடுகள் இதுபோல செய்வார்கள். உலகின் பெரும்பகுதி தங்கம் இதுபோல உலக நாடுகளின் மத்திய வங்கிகளிடமே இருக்கிறது. டிரம்ப் நடவடிக்கைகளால் தங்கம் விலை சர்வதேச மார்கெட்டில் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது..
பிட்காயின்
அதுபோல பிட்காயினையும் இருப்பு வைக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சியின் தலைநகராக அமெரிக்காவை மாற்றப் போவதாக அவர் கூறுகிறார். இது தொடர்பான நிர்வாக உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டார். தங்கத்தைப் போலவே பிட்காயினும் பொருளாதார பாதிப்பு ஏற்படும்போது யூஸ் செய்யலாம் என்கிறார்கள் டிரம்ப் ஆதரவாளர்கள்.
குவிக்கும் அமெரிக்கா
அதேநேரம் தங்கத்தைப் போல அமெரிக்க அரசு இதை வாங்கி வைக்காது. பல்வேறு கிரிமினல் மற்றும் சிவில் தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பிட்காயின்களை இந்த வாலெட்டில் போட்டு வைப்பார்களாம்.. இப்படி மொத்தம் 200 பிட்காயின்களை சேர்த்து வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதன் மதிப்பு 17 பில்லியன் (ரூ.1.4 லட்சம் கோடி) டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிட்காயினை நிரந்தரமாக அமெரிக்கா பாதுகாத்து வைக்குமாம். மேலும், புதிய பிட்காயின் வாங்க முடிவெடுத்தாலும் அது மக்கள் வரிப்பணத்தில் செய்யப்பாடு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சினை என்ன
அதேநேரம் அமெரிக்க பொருளாதார வல்லுநர்கள் டிரம்பின் இந்த உத்தரவை எதிர்க்கிறார்கள். ஏனென்றால் பிட்காயினும் தங்கமும் ஒன்று இல்லை.. பிட்காயின் என்பது ரிஸ்க்கான ஒரு முதலீடு என்கிறார்கள். தங்கத்தைப் போல பிட்காயினுக்கு எனத் தனியாக எந்தவொரு மதிப்பும் இல்லை என்பதும் சிக்கலாகும். மேலும், தங்கம் விலை ஒப்பீட்டளவில் நிலையாக இருக்கும். பெரிய ஏற்ற இறக்கம் இருக்காது. ஆனால், பிட்காயின் அப்படி இல்லை.. சில மணி நேரத்திலேயே உச்சத்திற்கும் போகும்.. அதல பாதாளத்திலும் விழும். இது ஒரு பெரிய ரிஸ்க்.
இருப்பினும், பிட்காயினை நீண்ட காலத்திற்கு வைத்திருப்பதன் மூலம், சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து எஸ்கேப் ஆக முடியும் என சிலர் குறிப்பிடுகிறார்கள். பிட்காயின் மொத்தமே 21 மில்லின் காயின்கள் மட்டுமே விநியோகத்திற்கு வரும். இதுவும் தங்கத்திற்கு இணையான ஒரு மதிப்பை பிட்காயினுக்கு வழங்குவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வெளிப்படைத்தன்மை
பொருளாதார வல்லுநர்கள் மேலும் கூறுகையில், "பிட்காயினை ஒரு நாடு கையிருப்பில் வைத்திருக்கும் போது ஒரு வெளிப்படைத்தன்மை இருக்கும். எந்த நாட்டிடம் எவ்வளவு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதை அவர்கள் விற்றாலும் பொதுமக்களுக்குத் தெரிந்துவிடும். ஆனால், தங்கத்தில் அப்படி இல்லை. எந்த நாட்டிடம் எவ்வளவு இருக்கிறது என்பதே யாருக்கும் தெரியாது. அப்படிப் பார்த்தால் இது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நடவடிக்கை தான்" என்றார்.
இதுபோல பிட்காயின் விவகாரத்தில் அமெரிக்காவிலேயே இரு வேறு கருத்துகளே நிலவுகிறது. ஆனால், அங்குள்ள வாரன் பபெட் உள்ளிட்ட பெரு முதலீட்டாளர்கள் பிட்காயினுக்கு மதிப்பு என்பதே இல்லை எனத் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications