அமெரிக்காவை விட்டு டிரம்ப் வெளியேற்ற விரும்பும் புலம்பெயர்ந்தோர் யார்! இந்தியர்கள் தான் அதிகமாம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றுவதில் புதிய அதிபர் டிரம்ப் மிகத் தீவிரமாக இருக்கிறார். இதற்காக அவர் பதவியேற்றது முதலே பல்வேறு உத்தரவுகளை அதிரடியாகப் பிறப்பித்து வருகிறார். டிரம்ப் தடாலடி நடவடிக்கைகளை எடுக்க என்ன காரணம்? இதனால் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் இதன் காரணமாகவே அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றும் டிரம்ப் தரப்பினர் தொடர்ந்து சாடி வருகிறார்கள்.

உண்மையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இது அமெரிக்கர்களை எந்தளவுக்குப் பாதிக்கிறது? மேலும், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றும் போது எந்த நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவில் புலம்பெயர்ந்தவர்கள்:
அமெரிக்காவில் வாழும் சட்ட விரோதமாகப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2007 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் குறைந்து வந்தது. ஆனால், அதன் பிறகு அது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. 2022ம் ஆண்டு அமெரிக்காவில் சுமார் 1.1 கோடி சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் இருந்தனர். கடந்த 2024ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை சுமார் 1.4 கோடியாக அதிகரித்துள்ளது. சட்டவிரோதமாக எல்லையில் நுழைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது, அவர்களுக்குக் கிடைக்கும் தற்காலிக சட்ட பாதுகாப்பு ஆகியவையே இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக உள்ளது..
குறிப்பாக 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் எல்லையில் அதிகளவில் மக்கள் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்ததாகக் கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு இறுதியில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் அகதிகள் அந்தஸ்து கோரி அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் CHNV திட்டம் (கியூபன், ஹைட்டியன், நிகரகுவான் மற்றும் வெனிசுலா) மற்றும் உக்ரைன் போர் காரணமாக மட்டும் அமெரிக்காவிற்கு வரும் அகதிகள் எண்ணிக்கை 2023 டிசம்பரில் 5 லட்சமாக உயர்ந்துள்ளது.
எந்த மாகாணங்களில் அதிகம்:
அமெரிக்காவில் குறிப்பிட்ட 6 மாகாணங்களில் தான் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. புளோரிடாவில் 4,00,000 புலம்பெயர்ந்தோர் உள்ள நிலையில், டெக்சாஸ் மாகாணத்தில் 85,000 பேரும், நியூயார்க்கில் 70,000 பேரும் உள்ளனர். நியூ ஜெர்சி மாகாணத்தில் 55,000 பேர் உள்ள நிலையில், மாசசூசெட்ஸில் 50,000 பேரும், மேரிலாந்தில் 40,000 புலம்பெயர்ந்தோரும் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
மெக்சிகோ:
சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவோர் மெக்சிகோ வழியாகவே அதிகம் உள்ளே நுழைந்து வருகிறார்கள். 2022ம் ஆண்டு 40 லட்சம் பேர் சட்டவிரோதமாக மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் நுழைந்துள்ளனர். இது அதிகம் போலத் தெரிந்தாலும் கூட, கடந்த 2007ம் ஆண்டு 69 லட்சம் பேர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மெக்சிகோ எல்லையில் சமீப ஆண்டுகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தியது உள்ளிட்ட காரணங்களால் சட்டவிரோதமாக நுழைவோரின் எண்ணிக்கை குறைந்தே வருகிறது.
இந்தியர்கள் அதிகம்:
அதேநேரம் கரீபியன் (300,000), தென் அமெரிக்கா, ஐரோப்பா (275,000) மற்றும் ஆசியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவது அதிகரித்துள்ளது. 2019 - 2022 காலகட்டத்தில் எல் சால்வடாரில் இருந்து 7.5 லட்சம் பேர், இந்தியாவில் இருந்து 7.25 லட்சம் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்துள்ளனர். இது அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்தோரின் எண்ணிக்கையாகும். இவர்களையே டிரம்ப் வெளியேற்ற விரும்புகிறார். உரிய விசா வாங்கி அமெரிக்காவுக்குள் சென்றவர்களுக்கு இதனால் பிரச்சினை இல்லை.
கடந்த 2022 டேட்டாவை வைத்துப் பார்த்தால் அமெரிக்காவில் சுமார் 83 லட்சம் பேர் சட்டவிரோதமாகக் குடியேறி வேலை செய்து வருகிறார்கள். இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 4.8% ஆகும். நெவாடா (9%), டெக்சாஸ் (8%) மற்றும் கலிபோர்னியா (7%) உள்ளிட்ட மாகாணங்களில் மட்டும் அதிகமாக உள்ளது. இருப்பினும், அச்சப்பட வேண்டிய அளவுக்கு அதிகம் இல்லை. ஆனால், இவர்களால் தான் பெரிய பாதிப்பு என்பது போல டிரம்ப் தரப்பினர் தொடர்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications