வெளிநாட்டினரை வரவேற்கும் அமெரிக்கா.. முடிவுக்கு வந்தது 20 மாத கட்டுப்பாடுகள்.. ஏன் மிகவும் முக்கியம்
வாஷிங்டன்: கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாட்டினருக்குத் தடை விதித்திருந்த அமெரிக்கா, சுமார் 20 மாதங்களுக்குப் பிறகுத் தனது எல்லையை மீண்டும் திறந்துள்ளது.
கொரோனா பாதிப்பு இன்னும் எந்தவொரு நாட்டிலும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அதைச் சமாளிப்பது மிகப் பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா முதல் அலையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பிரிட்டன், இந்தியா நாடுகளில் தோன்றிய உருமாறிய கொரோனா அடுத்தடுத்த கொரோனா அலைகளை உண்டாக்கியது.

அமெரிக்கா தடை
இப்படி கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் வைரஸ் பாதிப்பைச் சமாளிப்பது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் டிரம்ப் அதிபராக இருந்த போது சுமார் 1.5 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்த தடை பைடன் ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ந்தது.

வேக்சின் பணிகள்
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி பணிகளை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனால் வைரஸ் பாதிப்பு எதிர்பார்த்ததைக் காட்டிலும் சீக்கிரம் கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு கட்டுப்பாடுகள், வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றனர். இந்தச் சூழலில் அமெரிக்காவும் வெளிநாட்டினருக்கு அனுமதி கொடுத்து அறிவித்துள்ளது.

அமெரிக்கா உத்தரவு
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா வெளிநாட்டினருக்குத் தனது எல்லைகளைத் திறந்துள்ளது. தொழில் ரீதியாக வருவபர்கள், சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் அமெரிக்கா வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருகிறது. அமெரிக்கா வருபவர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மேலும், பயணத்திற்கு மூன்று நாட்களுக்குள் செய்யப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 கட்டங்கள்
அமெரிக்காவின் இந்த உத்தரவு இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக இன்று முதல் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு வேக்சின் செலுத்தியவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரம் வேக்சின் போடாத பயணிகளும் அத்தியாவசிய பயணங்களுக்கு நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரம் வரும் ஜனவரி முதல் அத்தியாவசியப் பயணம் என்றாலும் சரி, அத்தியாவசியமற்ற பயணம் என்றாலும் சரி கொரோனா வேக்சின் கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த தடுப்பூசிகள்
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் விமானம் மூலம் நுழைவதற்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று அமெரிக்கச் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேநேரம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சின் செலுத்தியவர்களுக்கு அனுமதி உண்டா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் இல்லை. அதேநேரம் உலக வல்லரசான அமெரிக்கா வேக்சின் போட்டவர்களை அனுமதிப்பதாக அறிவித்துள்ள நிலையில், மற்ற நாடுகளும் விரைவில் இதே போன்ற அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா கொரோனா பாதிப்பு
உலகிலேயே கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 4.77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 7.75 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நிறுவனங்கள் பைசர், மாடர்னா, ஜான்சன் ஆகியவை கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது. இவற்றைக் கொண்டு அமெரிக்காவில் மிக வேகமாக வேக்சின் பணிகள் நடைபெற்று வருகிறது. 2 டோஸ் வேக்சின் முடிந்து பூஸ்டர் டோஸ் பணிகளையும் அமெரிக்கா தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications