"கோரமான பேராசை!" எண்ணெய் நிறுவனங்களுக்கு வரி போடுங்க! திடீரென சீறிய ஐநா தலைவர்! என்ன காரணம்
வாஷிங்டன்: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக ஐநா சபை சில முக்கிய கருத்துகள் தெரிவித்து உள்ளது.
உக்ரைன் போருக்குப் பின்னர், உலக நாடுகளின் நிலையைப் பெருமளவு மாற்றிவிட்டன. கொரோனா பெருந்தொற்றில் இருந்து மெல்ல மீண்டு வந்த சர்வதேச பொருளாதாரத்திற்கு இந்த போர் மற்றொரு அதிர்ச்சியைக் கொடுத்தது.
ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கை காரணமாக உக்ரைன் நாட்டின் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் சூரிய காந்தி எண்ணெய் தொடங்கிப் பல உணவுப் பொருட்களின் விலையும் கூட அதிகரித்தது.

ரஷ்யா
இவை எல்லாவற்றையும்விட கச்சா எண்ணெய் விலை மளமளவென அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஏற்கனவே கொரோனாவால் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்ய ஒபெக் நாடுகள் உற்பத்தியைக் குறைத்து இருந்தது. இந்தச் சூழலில் உக்ரைன் போர்க் கச்சா எண்ணெய் பற்றாக்குறையை மோசமாக்கியது. உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து உள்ளதால், ரஷ்யாவிடம் இருந்து அவர்கள் கச்சா எண்ணெய்யை வாங்குவதில்லை.

கச்சா எண்ணெய்
இதனால் கச்சா எண்ணெய் பற்றாக்குறை அதிகரித்து உள்ளது. இதனால் விலையும் சில மாதங்களில் பல மடங்கு அதிகரித்து விட்டது. இதனால் உலகின் பெரும்பாலான ஏழை மற்றும் வளரும் நாடுகள் எரிபொருள் இறக்குமதி செய்வதில் சிரமங்களை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் மறுபுறம் எக்ஸான், செவ்ரான், ஷெல், டோட்டல் எனர்ஜிஸ் ஆகிய நான்கு எரிசக்தி நிறுவனங்களின் லாபம் கிட்டதட்ட இரட்டிப்பு ஆகி உள்ளது.

கோரமான பேராசை
பொதுமக்கள் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழலில் எரிசக்தி நிறுவனங்கள் கொள்ளை லாபத்தில் பொருட்களை விற்பதாகக் குற்றச்சாட்டுகளும் கிளம்பி உள்ளது. இது தொடர்பாக ஐநா சபையின் செய்தித்தொடர்பாளர் அன்டோனியோ குட்டரெஸும் கருத்து தெரிவித்து உள்ளார். அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில், "இந்த கோரமான பேராசை ஏழை மக்களைத் தண்டிக்கிறது. நமது வளர்ச்சியையும் அழிக்கிறது.

வரி
இந்த அதிகப்படியான லாபங்களுக்கு வரி விதிக்குமாறு அனைத்து நாடுகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.. இந்த கடினமான காலங்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஆதரவளிக்க இந்த நிதியை உலக நாடுகள் பயன்படுத்த வேண்டும். உலகெங்கிலும் உள்ள குடும்பங்களும் அரசுகள் ஏற்கனவே கடும் அழுத்தத்தில் உள்ளன. இந்தச் சூழலில் அதிக எரிசக்தி விலை என்பது பரவலான விளைவுகளை ஏற்படுத்தும்.

மீள முடியா கடன்
இப்போது பல வளரும் நாடுகள், கொரோனாவில் இருந்து மீள முடியாமல் கடனில் மூழ்கி, போதிய நிதி கிடைக்காமல் போராடி வருகிறது. நாம் சற்று கவனக்குறைவாக இருந்தாலும் நிலைமை கையை விட்டுச் செல்லக்கூடும். எல்லா நாட்டையும் பாதிக்கக் கூடிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றங்களை நாம் ஏற்கனவே பார்த்து வருவதால் எச்சரிக்கை தேவை" என்றார்.

பிரிட்டன்
கடந்த மாதம் தான், எரிபொருள் நிறுவனங்களுக்குப் பிரிட்டன் அரசு 25% வரியை விதித்து இருந்தது. அதேநேரம் அமெரிக்காவில் சில எம்பிகள் இதற்குக் குரல் கொடுத்தாலும், அது சட்ட வடிவமாக வரவில்லை. இந்தியாவிலும் கடந்த மாதம் பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு வரி விதித்து இருந்தது. இருப்பினும், அது கொஞ்ச நாட்களிலேயே வாபஸ் பெறப்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications