அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோவை சந்தித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) வால்ட்ஸ் ஆகியோரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற பின்னர் அந்நாட்டின் புதிய அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் இந்தியா நடத்திய முதல் சந்திப்பு இதுவாகும்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முன்வரிசையில் முதலிடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ட்ரம்ப், உலக நாடுகளை அதிர வைக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி இருக்கிறது.
இந்த நிலையில் ட்ரம்ப் அதிபராக பங்கேற்ற பின்னர் சர்வதேச அமைப்பான குவாட்-ன் வெளியுறவு அமைச்சர்கள் உச்சி மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது, குவாட் அமைப்பை மேலும் வலுவானதாக உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.

மேலும் அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வால்ட்ஸ் ஆகியோரையும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.












Click it and Unblock the Notifications