இந்தியர்களை நாடு கடத்தும் பணியை தொடங்கிய டிரம்ப்! அமெரிக்காவில் இருந்து கிளம்பிய விமானம்! பரபர தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை ஏற்றிக்கொண்டு சி-17 ராணுவ விமானம் புறப்பட்டுள்ளது. இதில் 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 7 லட்சத்து 25 ஆயிரம் இந்தியர்கள் உரிய ஆவணம் இன்றி வசிப்பதாக சொல்லப்படுகிறது. இதில் இன்று சி 17 ராணுவ விமானம் மூலம் 205 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றுவேன் என பிரசாரத்தின் போதே டிரம்ப் சூளுரைத்தார். அதேபோல, அமெரிக்கா நலன்களுக்கு மட்டுமே முக்கியம் அளிப்பேன் எனப் பேசி வந்த டிரம்ப், அதிபராக பொறுப்பேற்றதும், பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவியை நிறுத்தி வருகிறார்.

அதேபோல கனடா, மெக்சிகோ , சீனா ஆகிய நாடுகளுக்கும் வரி விதித்தார். அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் எனவும் மிரட்டி வருகிறார். டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ மற்றும் கனடா பொருட்கள் மீதான வரியை தற்காலிகமாக தற்போது நிறுத்தி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒருபக்கம் இருக்க, அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள புலம் பெயர் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையினையும் அந்நாடு தொடங்கியுள்ளது. அந்த வகையில், அமெரிக்காவில் சுமார் 7,25,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக வசிப்பதாக சொல்லப்படுகிறது. மெக்சிகோ, எல் சால்வடாருக்கு அடுத்தபடியாக இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் சட்டவிரோதமாக வசிப்பதாக சொல்லப்படுகிறது.
மெக்சிகோ எல்லையை ஒட்டி இருக்கும் மாநிலங்களில் அவசர நிலையை பிரகடனப்படுதிய டிரம்ப், வரும் நாட்களில் அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய மக்களுக்கு எதிரான தணிக்கை மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார். இத்தகைய சூழலில் தான், சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் ராணுவ விமானம் இந்தியா புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "சி-17 விமானம் சட்ட விரோதமாக குடியேறியவர்களை ஏற்றிக்கொண்டு இந்தியா புறப்பட்டுள்ளதாகவும், எனினும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த விமானம் வராது" என்றும் கூறியுள்ளார். எனினும், தற்போது புறப்பட்டு இருக்கும் விமானத்தில் 205 பேர் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இன்று காலை புறப்பட்ட சி 17 விமானம் மூலம் 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் இந்தியா கூறும் போது, அமெரிக்காவில் ஆவணம் இன்றி சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திரும்ப பெறுவதில் எப்போதும் தயாராக இருக்க்கிறோம் என்று கூறியது. அமெரிக்காவில் இருந்து யாரை நாடு கடத்த வேண்டும் என்பதை இந்தியா சரிபார்த்து வருவதாகவும் ஜெய்சங்கர் கூறினார். எனினும், எத்தனை பேர் என்ற எண்ணிக்கை உறுதி செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications