ஹுண்டாய் ஆலைக்குள் ரெய்டு.. தென்கொரியர்களை தேடித்தேடி கைது செய்த அமெரிக்க போலீஸ்!
வாஷிங்டன்: அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை தேடித்தேடி அந்நாட்டு போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் தனது நட்பு நாடான தென்கொரியாவை சேர்ந்தவர்களையும் அமெரிக்க போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
ஜார்ஜியாவில் ஹுண்டாய்-எல்.ஜி ஆலையில் சட்டவிரோதமாகப் பணியாற்றியதாகச் சந்தேகிக்கப்படும் தென் கொரியர்கள் உட்பட 475 பேர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்கொரியா அமெரிக்காவின் நட்பு நாடுதான். வடகொரியாவை சமாளிக்க தென்கொரியாவை அமெரிக்கா கையில் போட்டு வைத்திருக்கிறது. இப்படி இருக்கையில் டிரம்ப் வரி விஷயத்தில் தென்கொரியாவுடன் பஞ்சாயத்தை இழுத்து வைத்திருக்கிறார். வரி பஞ்சாயத்தால் இப்போது இரு நாடுகளுக்கு இடையே உறவு அவ்வளவு சிறப்பாக இல்லை. நிலைமையை பேசி சரி செய்து, மீண்டும் ஒன்று சேரலாம் என முயற்சிக்காத டிரம்ப், உரிய அனுமதியின்றி அமெரிக்காவில் வசிக்கும் தென்கொரிய மக்களை வெளியேற்ற உத்தரவிட்டிருக்கிறார்.
உத்தரவையடுத்து ஜார்ஜியாவில் ஹுண்டாய்-எல்.ஜி ஆலையில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். இந்த ஆலை மின்சார வாகனங்களுக்கான மின்கலங்களை உற்பத்தி செய்து வருகிறது. இப்படியொரு ஆலை ஜார்ஜியாவில் அமைந்திருப்பது, அந்த மாகாணத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் கொண்டது என பல்வேறு தரப்பினரும் கூறி வந்திருக்கிறார்கள். அப்படியான ஆலையில்தான் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது.
ரெய்டு தொடர்பாக வெளியான வீடியோவில், ஹுண்டாய் மோட்டார்-எல்.ஜி எனர்ஜி சொல்யூஷன் கூட்டாண்மைக்குச் சொந்தமான எலபெல் நகர ஆலையை நோக்கி வாகனங்கள் அணிவகுத்துச் செல்வதும், பின்னர் குடியுரிமை அதிகாரிகள், தொழிலாளர்களை வரிசையாக நிற்கச் சொல்வதும் பதிவாகியிருக்கிறது. அந்த தொழிலாளர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அவர்கள் வெளியேற்றப்படு
வதும் வீடியோவில் பதிவாகியிருக்கிறது.
வெளியேற்றப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களின் கைகளும் கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர்கள் கைதிகளை கொண்டு செல்லும் வாகனத்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த விவரித்த சக தொழிலாளர்கள், "அந்த சம்பவம் போர்க்களம் போல இருந்தது. அவர்கள் திடுதிப்பென வந்தார்கள், எல்லோரையும் வரிசையில் நிற்கவைத்து சோதனை செய்தார்கள். எந்த சோதனையும் இல்லாமல் நாங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேல் வெற்று சுவர்களை பார்த்தவாறு நிற்கவைக்கப்பட்டோம்" என்று கூறியிருக்கின்றனர்.
இந்த சம்பவம், ஏற்கெனவே எரிந்துக்கொண்டிருக்கும் தென்கொரியா-அமெரிக்கா உறவில் மேலும் எண்ணெய்யை ஊற்றுவதை போல அமைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications