"10 சதவிகிதம்.." சீனா மீதான வரிகள் தடாலடியாக குறைப்பு.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு! ஏன் முக்கியம்
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் டிரம்ப்- சீனா அதிபர் ஜி ஜின்பிங் இடையே இன்று நடந்த ஆலோசனைக் கூட்டம் சர்வதேச அளவில் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இந்த மீட்டிங் சிறப்பாகவே அமைந்ததாக டிரம்ப் கூறியிருக்கிறார். இந்த மீட்டிங்கில் ஆலோசனை செய்யப்பட்டவை என்ன.. இதில் என்ன மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
அமெரிக்கா சீனா இடையே வர்த்தக மோதல்கள் தொடர்ந்து வந்த நிலையில், அதிபர் டிரம்ப்- ஜி ஜின்பிங் இன்று தென்கொரியாவில் ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பில் இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசித்தனர். குறிப்பாக மூன்று முக்கியமான பிரச்சனைகளில், குறைந்தபட்சம் தற்காலிகத் தீர்வு கிடைத்துள்ளது.

தடாலடியாகக் குறைக்கப்பட்ட வரி
முதலில் வரி விவகாரம்.. அமெரிக்கா சீனா இடையே வரி குறைப்பில் முக்கியமான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. தான் முதல்முறையாக அதிபராக இருந்தபோதே சீனா மீது டிரம்ப் தாறுமாறாக வரிகளை விதித்திருந்தார். பைடன் வந்த பிறகே அந்த வரிகளை நீக்கினார். இந்தாண்டு தொடக்கத்தில் மீண்டும் அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் வரிகளைத் தாறுமாறாக உயர்த்தினார். நடுவில் சில காலம் இந்த வரிகளை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
இருப்பினும், ரேர் எர்த் விவகாரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், சீனா மீது கூடுதலாக 100% வரி விதிப்பேன் என்றும் அது நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தார். அந்தக் கூடுதல் வரி அமலுக்கு வர இரு நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில் தான், இந்த மீட்டிங்கில் அதற்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது. அறிவிக்கப்பட்ட கூடுதல் 100% வரி நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனா மீது 57% வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், அது 10% குறைக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். அதாவது இனி அமெரிக்காவுக்குச் செல்லும் சீன பொருட்களுக்கு 47% மட்டுமே வரி விதிக்கப்படும்.
ரேர் எர்த் மெடல்
அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான மிக முக்கியமான பஞ்சாயத்து என்றால் அது ரேர் எர்த் மெடல் தான். இந்தக் காலத்தில் மின்சார வாகனங்கள் தொடங்கி பல்வேறு விஷயங்களை உற்பத்தி செய்வதில் ரேர் எர்த் மெடல் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ரேர் எர்த் மெடல் இப்போது முழுக்க முழுக்க கிட்டத்தட்ட சீனா வசம் மட்டுமே இருக்கிறது. சீனா தான் இதன் சந்தையை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறது. டிரம்ப் வரிகளை விதித்தபோது, இந்த ரேர் எர்த் மெடலை வைத்து சீனா பதிலடி கொடுத்தது. அதாவது அமெரிக்காவுக்குச் செல்லும் ரேர் எர்த் மெடல்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது.
நேரடியாகத் தடை இல்லை என்றாலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் அமெரிக்காவின் தொழிற்துறை முடங்கும் சூழல் உருவானது. அந்த விஷயத்திலும் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு தற்காலிக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஓராண்டுக்குச் சீனாவிடம் இருந்து அமெரிக்காவுக்கு எந்தவொரு சிக்கலும் இல்லாமல் ரேர் எர்த் மெடல்கள் செல்லும். அதன் பிறகு அப்போதுள்ள சூழலைப் பொறுத்து முடிவெடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
சோயாபீன்ஸ்
கடைசியாக சோயாபீன்ஸ் ஏற்றுமதி.. அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு இன்னுமே கணிசமான அளவுக்கு விவசாயம் பங்களிக்கிறது. குறிப்பாக சோளம் மற்றும் சோயாபீன்ஸ் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்து சோயாபீன்ஸ் ஏற்றுமதியைச் சீனா தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் அமெரிக்க விவசாயிகள் சோயாபீன்ஸ் உற்பத்தியை அதிகரிக்க ஆரம்பித்தனர். ஆனால், டிரம்ப் வரி விதித்தவுடன் அமெரிக்க சோயாபீன்ஸ்களை வாங்குவதைச் சீனா நிறுத்திவிட்டது.
இதனால் பல நூறு டன் சோயாபீன்ஸ் அமெரிக்காவிலேயே தேங்கும் சூழல் உருவானது. அமெரிக்க விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவானது. சோயாபீன்ஸ்கள் குப்பைக்குப் போகும் ஆபத்து ஏற்பட்டிருந்த நிலையில், அதிலும் இப்போது ஒரு முடிவு ஏற்படுவதுள்ளது. உடனடியாக அமெரிக்க சோயாபீன்ஸ்களை வாங்கும் பணிகளைச் சீனா தொடங்கும் என டிரம்ப் கூறியிருந்தார். இந்த மூன்றும் தான் மேஜர் விஷயங்கள். இதுபோக போதைப் பொருள் தடுக்க இணைந்து செயல்படுவது, தூதரகச் செயல்பாடு எனச் சின்ன சின்ன விஷயங்களிலும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அடுத்து என்ன
இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு நடுவே வர்த்தக உடன்படிக்கை ஏற்பட்டுள்ள நிலையில், இதனால் வர்த்தக உறவுகள் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே அமெரிக்கப் பங்குச்சந்தைகள் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், தங்கம் விலையும் ஓரளவுக்குக் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications