டிரம்ப்பிற்கு அடித்த மெகா ஜாக்பாட்.. தேர்தல் நெருங்கும் போது.. இது யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்பிற்கு எதிராக பல்வேறு குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளது. இதற்கிடையே டிரம்ப்பிற்கு நல்ல செய்தியாக அவர் மீதான இரு குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதை வரவேற்றுள்ள டிரம்ப் ஆதரவாளர்கள், அவர் குற்றமற்றவர் என்பதையே இது காட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், இதில் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே போட்டி நடக்கிறது. போட்டி கடுமையாக இருப்பதால் இரு தரப்பும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

டிரம்ப்: முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இரு தரப்பிற்கும் இடையே அதிபர் தேர்தல் விவாதம் நடந்தது. இதில் கமலா ஹாரிஸ் கை சற்று ஓங்கி இருந்தது. அந்த விவாதத்தில் டிரம்பை விடக் கமலா ஹாரிஸுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. இதற்கிடையே தேர்தல் நெருங்கும் நிலையில், டிரம்பிற்கு நல்ல செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
குற்றச்சாட்டுகள் தள்ளுபடி: கடந்த 2020இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குளறுபடி செய்ய முயன்றதாக டிரம்ப் மீது குற்றவியல் வழக்கு நடந்து வந்தது.. அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்த நிலையில், அதில் இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். சட்ட ரீதியான காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்த குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் மற்ற 8 குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை தொடர்ந்து நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2020ல் நடந்த அதிபர் தேர்தலில் ஜார்ஜியா மாகாணத்தில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றதாக விசாரணை நடந்தது. அந்த வழக்கில் முதலில் டிரம்ப் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஜார்ஜியா மாகாணம் தரப்பில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை வரும் டிச. மாதம் தான் நடக்கும். என்பதால் அது அமெரிக்க அதிபர் தேர்தலில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
விசாரணை: இது மாகாண அளவில் நடக்கும் விசாரணையாகும். இது தவிர பெடரல் அளவிலும் ஒரு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும், அமெரிக்க அதிபர் பதவியில் இருக்கும் போது நடந்த சம்பவங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் அந்த வழக்கு விசாரணையும் இப்போது மெதுவாகவே நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் மீதான இரண்டு குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இதை அவரது வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். டிரம்ப் குற்றமற்றவர் என்பதற்கு இதுவே சாட்சி என்றும் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்றும் தெரிவித்தனர். அதேநேரம் ஜார்ஜியா மாகாண அரசு தரப்பில் இதற்கு எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை.
சர்வே முடிவுகள்: விவாதத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட பல சர்வே முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அவை அனைத்திலும் கமலா ஹாரிஸ் தான் முன்னிலையில் இருந்தார், இரு தரப்பிற்கும் இடையே போட்டி கடுமையாக உள்ள போதிலும் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு அதிகமாக இருக்கிறது. நவ. மாதம் வரை இதே டிரெண்ட் தொடர்ந்தால் நிச்சயம் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சாதனையைக் கமலா ஹாரிஸ் படைப்பார்.












Click it and Unblock the Notifications