பாகிஸ்தானுக்கு புதிய ஆயுதங்களை தர மாட்டோம்.. ஆனால் அடுத்த வரியே ட்விஸ்ட் வைத்த டிரம்ப்! என்ன மேட்டர்
வாஷிங்டன்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா புதிய அதிநவீன ஆயுதங்களை வழங்கவுள்ளதாகக் கடந்த சில நாட்களாகவே அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இதன் மூலம் பாகிஸ்தான் விமானப்படை பலம் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே இது தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் மிக முக்கியமான ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியா அமெரிக்கா இடையேயான உறவில் இந்தாண்டு தொடக்கம் முதலே சிக்கல் நிலவி வருகிறது. டிரம்ப் நடவடிக்கைகளால் இது பாதிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பாகிஸ்தானிடம் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருகிறது. சமீபத்தில் கூட அமெரிக்கா சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தார்.

அமெரிக்கத் தூதரகம் விளக்கம்
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அதிநவீன AIM-120 ஏவுகணைகளை வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. வானில் இருந்தபடியே செலுத்தப்படும் இந்த ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இதற்கிடையே இந்தத் தகவலை அமெரிக்கத் தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தச் செய்திகளில் உண்மை இல்லை என விளக்கமளித்துள்ளது.
மறுப்பு
அதேநேரம் இதில் இன்னொரு ட்விஸ்ட் இருக்கிறது. அதாவது இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்குப் புதிய ஏவுகணைகளை வழங்குவது குறித்து எதுவும் இல்லை என்று தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. அதேநேரம் இந்த ஒப்பந்தம் பராமரிப்பு மற்றும் உதிரிப் பாகங்கள் தொடர்பானது என்றும் இதில் பல நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தானும் இருப்பதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அதாவது பாகிஸ்தான் இந்த ஏவுகணை பயன்படுத்தியிருந்தால் மீண்டும் அதை நிரப்ப ஏவுகணை தரப்படுமாம். அதாவது பாகிஸ்தானிடம் இந்த ஏவுகணை 200 இருந்தது என வைத்துக் கொள்வோம். அதில் பாகிஸ்தான் 22 ஏவுகணைகளைப் பயன்படுத்தி இருந்தால்.. அந்த 22ஐ மட்டும் அமெரிக்கா கொடுக்கும். கூடுதலாக எந்தவொரு ஏவுகணைகளையும் கொடுக்காது என்பதே இதன் அர்த்தம்.
அமெரிக்கத் தூதரகம் சொல்வது என்ன
இது தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த செப்டம்பர் 30ம் தேதி அமெரிக்கப் போர்த் துறை (Department of War), சில பராமரிப்புப் பொருட்களுக்கான வெளிநாட்டு ராணுவ விற்பனை ஒப்பந்தம் குறித்த வழக்கமான ஒப்பந்த அறிவிப்புகளை வெளியிட்டது.
இந்த வழக்கமான பராமரிப்பு ஒப்பந்தம் மட்டுமே. இதில் பாகிஸ்தானின் ராணுவ திறனை அதிகரிக்கும் வகையிலான ஆயுதங்கள் வழங்கப்படாது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது அல்லது மிகைப்படுத்தப்பட்டது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலம் அதிகரிக்குமா?
கடந்த சில நாட்களாகவே பல்வேறு அமெரிக்க ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டன. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா புதிய AIM-120 AMRAAM ஏவுகணைகளைக் கொடுக்கவுள்ளதாகவும் இதன் மூலம் பாகிஸ்தானின் F-16 படை பலத்தை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது. முன்பே குறிப்பிட்டது போல அமெரிக்கா பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்பட்டு வருவதால் வருவதால் இந்தச் செய்திகள் யூகங்களைத் தூண்டின.
இந்தச் சூழலில் தான் அமெரிக்கத் தூதரகம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.. இந்த ஒப்பந்தம் வழக்கமான பராமரிப்பு தொடர்பானது என்றும் கூடுதல் ஆயுதங்கள் எதுவும் வழங்கப்படாது என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற ஒப்பந்த அறிவிப்புகள் அந்நாட்டின் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகளில் வழக்கமானவை. அமெரிக்கா உலகெங்கும் பல நாடுகளுக்கு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் கொடுத்துள்ள நிலையில், அவ்வப்போது இதுபோன்ற அறிவிப்புகள் வந்து கொண்டு தான் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications