35 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்த தம்பதியை நாடுகடத்திய டிரம்ப்.. கதறும் பிள்ளைகள்.. என்ன நடந்தது?
வாஷிங்டன்: டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு, அந்நாட்டு அதிகாரிகள் குடியேற்ற விவகாரங்களில் கடுமை காட்டி வருகிறார்கள். இதற்கிடையே கடந்த 35 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்த தம்பதியை திடீரென அந்நாட்டு அதிகாரிகள் நாடுகடத்தியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.
டிரம்ப் எப்போது அதிபராகப் பதவியேற்றாரோ அப்போது முதலே அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஒருவித அச்சத்தில் தான் இருக்கிறார்கள். சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கிறேன் என்ற பெயரில் டிரம்ப் நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

அமெரிக்காவில் 35 ஆண்டுகள்
கடந்த 35 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தவர்கள் கிளாடிஸ்- நெல்சன் கோன்சலஸ் தம்பதியினர். இவர்கள் கடந்த 1990ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். அதன் பிறகு இத்தனை காலம் அமெரிக்காவிலேயே இருந்துள்ளனர். அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் வசித்து வந்த இந்த குடும்பத்தினர் சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாடுகடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
மூவரும் அமெரிக்காவிலேயே பிறந்தவர்கள். அவர்கள் மூன்று பேரும் பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை மூலம் குடியுரிமை பெற்றுவிட்டனர். இதனால் தங்கள் 3 குழந்தைகளையும் விட்டுப் பிரிய வேண்டிய சூழலுக்கு கிளாடிஸ்- நெல்சன் ஜோடி தள்ளப்பட்டுள்ளது.
திடீரென நாடுகடத்தல்
அதாவது கடந்த பிப்ரவரி 21ம் தேதி அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் திடீரென கிளாடிஸ் வீட்டிற்குச் சென்றுள்ளனர். வீட்டிலேயே வைத்து 55 வயதான கிளாடிஸ் கோன்சலஸ் மற்றும் 59 வயதான நெல்சன் கோன்சலஸ் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சுமார் 3 வாரங்கள் அவர்களை அதிகாரிகள் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். பெற்றோருக்கு என்ன ஆனது என்று தெரியாமல் அவர்களின் பிள்ளைகள் பதறிய நிலையில், கடந்த மார்ச் 18ம் தேதி இருவரையும் சொந்த நாடான கொலம்பியாவிற்கு நாடு கடத்திவிட்டதாகக் கூறி அதிகாரிகள் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்..
இந்த ஜோடி கடந்த 1989ஆம் ஆண்டு அமெரிக்கா வந்தனர். கலிபோர்னியாவின் சான் யிசிட்ரோ அருகே இத்தனை ஆண்டுகளாக வசித்து வந்த அந்த ஜோடி, அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டனர். இந்த ஜோடிக்கு 3 குழந்தைகள் பிறந்த நிலையில், அவர்களையும் அமெரிக்காவிலேயே வளர்த்துள்ளனர். உள்ளூர் சமூகத்திலும் இந்த ஜோடி முக்கியமானவர்களாக இருந்தனர்.
கதறும் பிள்ளைகள்
இருவரும் குடியேற்ற விதிகளை முறையாகப் பின்பற்றி வந்ததாகவும் தங்கள் இருப்பை சட்டப்பூர்வமானதாக மாற்றத் தேவையான முயற்சிகளை எடுத்தே வந்ததாகவும் அவர்களின் பிள்ளைகள் கூறுகிறார்கள். அவர்கள் மேலும் கூறுகையில், "35 ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் இங்கே தங்கி ஒரு வாழ்க்கையை உருவாக்கியுள்ளனர். என்னையும் சேர்த்து 3 பிள்ளைகளை இங்கு தான் பெற்றெடுத்தனர்.
ஆனால், இப்போது அவர்கள் குற்றவாளிகளாக நடத்தப்படுகிறார்கள். எனது பெற்றோருக்கு நேர்ந்தது கொடூரமானது மட்டுமில்லை முற்றிலும் அநீதி. இந்த கொடூரம் எங்கள் குடும்பத்தைச் சிதைத்துவிட்டது. இதை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை" என்றார்.
வழக்கறிஞர்கள் சொல்வது என்ன
இந்த தம்பதியின் வழக்கறிஞரும் அதே கருத்தைத் தான் கூறுகிறார். கோன்சலஸ் தம்பதியினர் குடியுரிமை பெறத் தேவையான முயற்சிகளை எடுத்து வந்ததாக அவர்களின் குடியேற்ற வழக்கறிஞர் மோனிகா க்ரூம்ஸ் கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், "அவர்கள் இதுவரை அனைத்து வரிகளையும் செலுத்தி வந்துள்ளனர். எந்தவொரு குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகவில்லை.
குடியுரிமை பெறவே நீண்ட காலமாக சட்டப்பூர்வமாக முயன்று வந்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இப்போது மோசமான குடியேற்ற விதிகளால் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இத்தனை ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்துள்ளனர்.. வரிகளையும் செலுத்தியுள்ளனர். அப்படியிருக்கும்போது அவர்களை இவ்வளவு மோசமாக நடத்தியிருக்கத் தேவையில்லை. அவர்கள் பிள்ளைகள், பேரக்குழந்தைகளைப் பார்க்கக் கூட வாய்ப்பு தரவில்லை" என்றார்.
அதிகாரிகள் திட்டவட்டம்
அதேநேரம் அரசு தரப்பினர் கருத்து வேறு மாதிரியே இருக்கிறது. அதாவது கோன்சலஸ் தம்பதியினர் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் வசிக்கவில்லையாம். 1989ல் அமெரிக்காவுக்கு வந்துள்ளனர். 1992ல் நெல்சன் கோன்சலஸ் புகலிடம் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இருப்பினும், 1998ல் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 2000ம் ஆண்டு அவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன் பிறகு 2021 வரை பல்வேறு சட்டபூர்வ வழிகளையும் முயன்று பார்த்துள்ளனர். ஆனால், எதிலும் அவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வரவில்லையாம். இதன் காரணமாகவே சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தவர்களை நாடுகடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications