"இந்திய தேர்தல்களில் தலையிடவில்லை.." திடீரென விளக்கம் தந்த அமெரிக்கா! என்ன மேட்டர்.. பின்னணி என்ன
வாஷிங்டன்: இந்தியாவில் நடந்து வரும் தேர்தல்களில் அமெரிக்கா தலையிட முயல்வதாக ரஷ்யா சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், இதை அமெரிக்கா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் இந்தாண்டு வெளியிட்ட ரிப்போர்ட்டில் இந்தியாவின் மத சுதந்திரத்திற்கான நிலையைக் கண்காணிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

நிராகரிப்பு: இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பி இருந்த நிலையில், இது தொடர்பாக ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வார்த்தை மோதல் நடந்து வருகிறது. அதாவது இந்தியத் தேர்தல்களில் தலையிடவே அமெரிக்கா இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாக ரஷ்யா கூறியிருந்தது. இதற்கிடையே இந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகில் நடக்கும் எந்தவொரு தேர்தல்களிலும் அமெரிக்கா தலையிடாது என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்தார்.
அமெரிக்கா விளக்கம்: ரஷ்யாவின் குற்றச்சாட்டுகள் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "இல்லை.. நிச்சயமாக இல்லை.. இந்தியத் தேர்தல்களில் நாங்கள் தலையிடவில்லை.. இந்தியா மட்டுமின்றி உலகின் எங்குத் தேர்தல் நடந்தாலும் அதில் நாங்கள் ஈடுபட மாட்டோம். இந்தியாவில் நடக்கும் தேர்தல் என்பது இந்திய மக்கள் எடுக்க வேண்டிய முடிவு" என்று கூறியுள்ளார்.
முன்னதாக மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவாவிடம் காலிஸ்தானி கொலை திட்டம் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்குத் தான், அவர் இந்தியத் தேர்தல்களில் ரஷ்யா தலையிட முயல்வதாகப் பரபர குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார்.
ரஷ்யா குற்றச்சாட்டு என்ன: மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறது. இந்திய மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கு எதிராகவும் அவர்கள் இதுபோல ஆதாரமே இல்லாமல் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இந்தியாவில் மத சுதந்திரம் மீறப்படுவதாக அமெரிக்கா கூறியிருப்பது, இந்தியாவின் தேசிய மனநிலை மற்றும் வரலாறு குறித்து அமெரிக்காவுக்கு போதிய புரிதல் இல்லை என்பதையே காட்டுகிறது.
மேலும், இது இந்தியாவை அவமரியாதை செய்யும் செயல். இது அமெரிக்காவின் காலனித்துவ மனநிலையே காட்டுகிறது. இந்தியாவில் இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில், அதில் குழப்பத்தை ஏற்படுத்தவே அமெரிக்கா முயல்கிறது. இந்தியாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிட முயல்கிறது" என்று கூறியிருந்தார்.
காலிஸ்தான் பிரிவினைவாதி: அதேபோல காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுவின் கொலை முயற்சி விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டிலும் உண்மை இல்லை என்று ரஷ்ய செய்தி தொடர்பாளர் கூறியிருந்தார். இது தொடர்பான கேள்விக்கு மில்லர் வெளிப்படையாகப் பதிலளிக்கவில்லை. இது தொடர்பாக யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற அவர், இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து வருவதால் வெளிப்படையாக எந்தவொரு கருத்தையும் கூற முடியாது என்றார்.
மத சுதந்திர ஆணையம்: அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையமான (USCIRF) மொத்தம் 17 நாடுகளில் மத சுதந்திரத்தின் நிலைமையைக் கண்காணிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. சீனா, ஈரான், வடகொரியா, ரஷ்யா, சவுதி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் ஆளும் தரப்பு பாரபட்சமான தேசியவாதக் கொள்கைகளை வலுப்படுத்தியதாகவும் வெறுப்பு பேச்சுகளை ஆதரித்து உள்ளதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications