"எலான் மஸ்க் தாராளம்".. டிரம்புக்கு தேர்தல் நிதியாக மாதம் ரூ.375.80 கோடி நன்கொடை.. பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எக்ஸ் வலைதள உரிமையாளரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். அதோடு மாதம் ரூ.375.80 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளதாக அறிவித்து கவனம் ஈர்த்துள்ளார்.
அமெரிக்கா அதிபராக ஜோபைடன் உள்ளார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட ஆர்வமாக உள்ளார்.

அதேபோல் மறுபுறம் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவர்கள் 2 பேரும் தற்போது பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். அதிபர் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் தற்போது அமெரிக்கா அரசியல் களம் என்பது சூடுபிடித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் - ஜோ பைடன் ஆகியோர் நேரடியாக ஒரே மேடையில் விவாதம் செய்தனர். அதேபோல் அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் அவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் பிரசாரம் செய்த டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் அவரது காதில் குண்டு பாய்ந்தது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அவருக்கு உயிருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.
இந்நிலையில் தான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவில் டொனால்ட் டிரம்புக்கான ஆதரவு என்பது கணிசமாக உயர தொடங்கி உள்ளது. குறிப்பாக பெரிய பெரிய தொழிலதிபர்கள் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு தெரிவிக்க தொடங்கி உள்ளனர். தற்போது டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோபைடனுக்காக தேர்தல் நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது டொனால்ட் டிரம்பிற்கு பெரிய பிளஸ் பாயிண்டாக மாறி உள்ளது.
இந்நிலையில் தான் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான்மஸ்க் அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அதாவது முதலில் அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் நடுநிலை வகிக்க போவதாக அறிவித்தார். ஆனால் டொனால்ட் டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டார். அவர் டொனால்ட் டிரம்ப்பை ஆதரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்பிற்கு மாதந்தோறும் 4.5 கோடி அமெரிக்க டாலர்களை நன்கொடையாக எலான் மஸ்க் வழங்குவதாக அறிவித்துள்ளது. 4.5 கோடி அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் ரூ.375.80 கோடியாகும். அதாவது டொனால்ட் டிரம்பை வெற்றி பெற வைக்க எலான் மஸ்க் இந்த நன்கொடையை வழங்க உள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த நன்கொடை என்பது அமெரிக்கா பிஏசி என அழைக்கப்படும் ஒரு அரசியல் குழுவுக்கு செல்லும். இந்த குழு தான் அஞ்சல் வாக்குகள் உள்ளிட்ட பலவற்றை ஊக்குவிக்கும் பணிகளை மேற்கொள்ளும். அதேபோல் தொழிலதிபர்கள் ஷான் மாகுவேர், ஜான் ஹெரிங் ஆகியோர் தலா 5 லட்சம் அமெரிக்க டாலர்களையும், கேமரூன் மற்றும் டைலர் விங்க்லேவோஸ் தலா 2.5 லட்சம் டாலர்களையும் நன்கொடை வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications