வெறும் 10 நிமிடத்தில் 450 பேர் கைது! ஒரே நேரத்தில் சுற்றி வளைத்த அதிகாரிகள்.. டிரம்ப் அரசின் அதிரடி ஆபரேஷன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே அங்குள்ள ஹூண்டாய் ஆலையில் அமெரிக்க அதிகாரிகள் மிகப் பெரிய ஆபரேஷனை நடத்தியுள்ளனர். ஹோம்லேண்ட் செக்யூரிட்டி, எஃப்.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய ஆபரேஷனில் 450 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் தனது நாட்டில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாகச் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே, அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்தவர்களைக் கைது செய்த டிரம்ப் அரசு, அவர்களை நாடுகடத்தியிருந்தது.

அதிரடி ஆபரேஷன்
இதற்கிடையே டிரம்ப் அரசின் அதிகாரிகள் இப்போது மீண்டும் அதிரடி ஆபரேஷனை நடத்தியுள்ளனர். அமெரிக்காவின் ஜார்ஜியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி ஆலையில் அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் அதிரடி சோதனையை நடத்தியுள்ளனர். இரு நாட்களுக்கு முன்பு, அதாவது செப்டம்பர் 5ம் தேதி இந்த அதிரடி சோதனை நடத்தினர். ஆலையின் செயல்பாடுகள் முழுமையாக நிறுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 450-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
என்ன நடந்தது
சவன்னாவுக்கு மேற்கே அமைந்துள்ள 3,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஹூண்டாய் வளாகம், ஜார்ஜியா மாகாணத்தின் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சித் திட்டமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஓராண்டாக இங்கு சுமார் 1,200 பேர் பணிபுரிந்த வந்த நிலையில், அவர்களில் பலர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்கள் என தகவல் கிடைத்தது.. அதன் அடிப்படையில் அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர்.
சட்டவிரோத வேலைவாய்ப்பு நடைமுறைகள் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் குறித்த தகவலின் ஒரு பகுதியாகவே இந்த ரெய்டை நடத்தியதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது. ஏடிஎஃப் எனப்படும் ஆல்கஹால், புகையிலை, துப்பாக்கி மற்றும் வெடிபொருள் பணியகமும் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளது. மேலும், எஃப்.பி.ஐ., ஐசிஇ, ஜிஎஸ்பி உள்ளிட்ட பிற ஏஜென்சிகளும் சோதனையில் பங்கேற்று இருக்கிறது.
போர்களம் போல
ஒரு போர்க்களத்தில் நுழைவது போல அமெரிக்க பெடரல் அதிகாரிகள் இந்தப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். தொழிலாளர்களை சுவரின் பக்கம் திரும்பி நிற்க வைத்து, கைகளைத் தூக்கச் சொல்லியுள்ளனர். சிலர் பஸ்களுக்கு பின்னாலும் நிற்க வைத்துள்ளனர். இந்த ஆபரேஷனில் சுமார் 450 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா வந்த இவர்கள் முறைகேடாக வேலை செய்து வந்ததாகத் தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தென் கொரியா நாட்டை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது..
தென் கொரியா
கைது நடவடிக்கைக்குத் தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் கவலை தெரிவித்தது. மேலும், இது தொடர்பாகத் தகவல் கிடைத்தவுடன் தென் கொரியத் தூதர்கள் அங்கு விரைந்துள்ளனர். கொரியக் குடிமக்களின் சட்டபூர்வ உரிமைகளும் நலன்களும் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அமெரிக்க அதிகாரிகளைத் தென் கொரியா வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுபோல சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டவரால் தான் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்பதே டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாடு.. மேலும், சட்டவிரோதக் குடியேறிகளால் தான் நாட்டில் குற்றம் அதிகரிப்பதாகவும் டிரம்ப் தரப்பு சொல்கிறது. இதன் காரணமாகவே டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோதக் குடியேறிகளைப் பிடித்து நாடு கடத்தும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications