"நாடுகடத்தலுக்கு தடை.." டிரம்பிற்கு செக் வைத்த நீதிமன்றம்! அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிம்மதி
வாஷிங்டன்: டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு சட்டப்பூர்வமாக அங்குக் குடியேறிய வெளிநாட்டினர் கூட நாடுகடத்தல் நடவடிக்கையை எதிர்கொண்டு வருகிறார்கள். இதனால் இந்தியர்கள் அங்குப் பெரியளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கிடையே அங்குள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு உதவும் வகையிலான ஓர் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது இது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் அங்கு வசிக்கும் வெளிநாட்டினருக்குச் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் பல உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதனால் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் உள்ள சூழலில், இந்தியர்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே விசா ரத்து தொடர்பான வழக்கில் அமெரிக்க பெடரல் நீதிபதி முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இது அங்குள்ள வெளிநாட்டினருக்கு வழிகாட்டியாக அமையும் எனக் கூறப்படுகிறது.
இந்திய மாணவர்
அதாவது கிரிஷ் லால் இசெர்தாசனி என்ற இந்திய மாணவர் கடந்த 2021ம் ஆண்டு முதல் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். அவர் முறையாக F-1 மாணவர் விசா பெற்றே அமெரிக்கா சென்றுள்ளார். அவர் இத்தனை ஆண்டுகள் முறையாகப் படித்து வந்துள்ளார். மேலும், நல்ல மார்க் வாங்கியிருக்கிறார். கடைசி செமஸ்டரில் இருக்கும் அவருக்கு இன்னும் 30 நாட்களுக்கு குறைவாகவே கல்லூரி இருக்கிறதாம். மேலும், வரும் மே 10ம் தேதி பட்டமளிப்பு விழாவும் நடைபெற இருக்கிறது.
என்ன நடந்தது
இந்தச் சூழலில் தான் அவரை திடீரென டிரம்ப் நிர்வாகம் நாடு கடத்த முயன்றுள்ளது. அதாவது, அவரை கடந்தாண்டு நவம்பர் மாதம் அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அதற்காகவே நாடு கடத்தும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளது. தான் நவம்பர் 22ம் தேதி கைது செய்யப்பட்டது உண்மை தான் என்பதை ஒப்புக்கொண்ட கிரிஷ் அந்தச் சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
அதாவது அன்றைய தினம் ஒரு பாரில் இருந்து இரவு லேட்டாக வீட்டிற்கு நடந்து செல்லும்போது, மற்றொரு குழுவுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது வாய் சண்டையாக மட்டுமே இருந்துள்ளது. இருப்பினும், கிரிஷ் மற்றும் அவரது நண்பரை ஒழுங்கற்ற நடத்தை குற்றச்சாட்டிற்காக அமெரிக்க போலீசார் அன்றைய தினம் கைது செய்துள்ளனர். இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து விசாரித்த மாவட்ட வழக்கறிஞர் வழக்கை டிஸ்மிஸ் செய்துவிட்டார்.
கிரிஷ் தரப்பு விளக்கம்
இதனால் கிரிஷ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும், தண்டனையும் பெறவில்லை. இந்தச் சம்பவம் அப்போதே முழுமையாகத் தீர்க்கப்பட்டதாகவும் அப்போது குடியேற்றச் சிக்கல் குறித்து தன்னிடம் யாரும் எதுவும் சொல்லவில்லை என கிரிஷ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தைத் தவிர போலீசார் தன் மீது வேறு எந்தவொரு விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிரிஷ் தரப்பு நீதிமன்றத்தில் கூறியது.
இருப்பினும், கடந்த ஏப்ரல் 4ம் தேதி கிரிஷ் படித்துக் கொண்டிருந்த விஸ்கான்சின்- மாடிசன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர் சேவைகள் அலுவலகம் திடீரென அவருக்கு ஒரு மெயில் அனுப்பியுள்ளது. அதாவது இசெர்தாசனியின் மாணவர் & எக்சேஞ்ச் விசிட்டர் சிஸ்டம் (SEVIS) ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் மெயில்
வெளிநாட்டினர் மீதான குற்றவியல் வழக்குகள் உள்ளதா என்பது குறித்து நடத்தப்பட்ட பேக் கிரவுண்ட் செக் நடைமுறையில் கிரிஷ் சிக்கியதாகவும் இதனால் அவரது விசாவை அமெரிக்கா உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் SEVIS அமைப்பு ரத்து செய்துள்ளது தெரிய வந்தது. அதேநேரம் தனது விசா ரத்து குறித்து அமெரிக்கக் குடிவரவுத் துறை, பல்கலைக்கழகம் அல்லது அமெரிக்க வெளியுறவுத்துறை தன்னிடம் எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை என கிரிஷ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கிரிஷ் தரப்பு மேலும் கூறுகையில், "F-1 மாணவர் விசா நிறுத்தப்படுவது குறித்து கிரிஷுக்கு எந்த எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை. அவரிடம் எந்தவொரு விளக்கமும் கேட்கப்படவில்லை. இந்தத் தவறான புரிதலுக்கு விளக்கம் தர அவருக்கு எந்தவொரு வாய்ப்பும் தரப்படவில்லை. இதன் காரணமாக கிரிஷ் தனது பட்டப்படிப்பை முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், F-1 மாணவர் விசா கீழ் பயிற்சி பெறவும் முடியாமல் போய்விட்டது" என்று கூறப்பட்டு இருந்தது.
மாணவர் விசா
பொதுவாக அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு F1 விசா வழங்கப்படுகிறது. F1 விசா பெற்றவர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய முடியாது என்ற போதிலும் OPT என்ற முறையில் மாணவர்கள் எந்தத் துறையில் படிக்கிறார்களோ.. அந்தத் துறையில் தற்காலிகமாகக் குறிப்பிட்ட காலம் பயிற்சி பெறும் வகையில் வேலை செய்ய முடியும். தகுதிவாய்ந்த மாணவர்கள் சுமார் ஓராண்டு வரை இந்த முறையில் தாங்கள் படித்த துறையில் வேலை செய்யலாம். இந்த வாய்ப்பெல்லாம் கிரிஷுக்கு இல்லாமல் போய்விட்டது.
இது மட்டுமின்றி போலீசார் கைது நடவடிக்கையைக் காரணம் காட்டி கிரிஷ் மே 2ம் தேதியுடன் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. அவருக்கு மே 10ம் தேதியுடன் படிப்பு முடியும் நிலையில், எட்டு நாட்கள் முன்கூட்டியே விசா முடிவதால் அவரால் டிகிரி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வாதம்
கிரிஷும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்காவில் கல்வி பெறச் சுமார் 240,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி) செலவு செய்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் தங்க முடியாமல் போனாலும் கூட ஒப்பந்தம் இருப்பதால் அடுத்த 4 மாதங்களுக்கு வாடகை செலுத்த வேண்டிய கட்டாயமும் இருப்பதாக கிரிஷ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், இதனால் கடும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் தூங்கக் கூட முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியே சென்றால் நாடுகடத்தப்படுவோமோ என்ற அச்சம் இருப்பதால் வீட்டை விட்டுக் கூட வெளியே வர முடியாத நிலை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை விதித்த நீதிபதி
இந்த வழக்கை விசாரிக்க மாவட்ட பெடரல் நீதிபதி வில்லியம் கான்லி நாடுகடத்தல் உத்தரவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். முதற்கட்ட விசாரணை முடிவடையும் வரை கிரிஷ் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் F-1 மாணவர் விசா ரத்து செய்யப்பட்ட நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார். வரும் ஏப்ரல் 28ம் தேதி வழக்கு முதற்கட்ட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிலையில், அதுவரை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏன் முக்கியம்
இது தற்காலிக உத்தரவு தான் என்றாலும் டிரம்ப் நிர்வாகத்திற்கு வைக்கப்பட்ட மிகப் பெரிய செக் ஆக இது பார்க்கப்படுகிறது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு 1000+ மாணவர்களுக்குத் திடீரென மாணவர் விசா ரத்து செய்யப்பட்டதாக மெயில்கள் போன நிலையில், அவர்களுக்கு இந்த வழக்கு ஒரு வழிகாட்டியாக அமைகிறது. மேலும், அமெரிக்காவில் பல லட்சம் இந்தியர்கள் உள்ளனர். சிறு கைது நடவடிக்கைக்குக் கூட அவர்கள் நாடுகடத்தும் நடவடிக்கை எதிர்கொள்ளும் நிலையில், அவர்களுக்கும் இந்த வழக்கு முன்மாதிரியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications