இந்தியர்களிடம் பணிந்த டொனால்ட் டிரம்ப்.. ‛கோல்டு கார்டு’ திட்டத்தால் அமெரிக்கா போடும் பிளான்!
வாஷிங்டன்: அமெரிக்க வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும். பிற நாடுகளில் இருந்து குடியேறி அமெரிக்கர்களின் வேலைகளை பறிக்கும் இந்தியர்கள் உள்பட மற்ற நாட்டை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று டொனால்ட் டிரம்ப் கூறினார். தற்போது அவர் அமெரிக்காவில் ‛கோல்டு கார்டு' வழியாக குடியுரிமை பெறும் திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர்
இந்தியர்களிடம் பணிந்துள்ளார். இதனை டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று செயல்பட்டு வருகிறார். இவர் தனது தேர்தல் பிரசாரத்தின்போதே ‛‛அமெரிக்காவில் சட்டவிரோதமாக பிற நாடுகளில் இருந்து குடியேறி உள்ளனர். இவர்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கின்றனர். அதிபர் ஆனதும் அவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள். அமெரிக்காவில் உள்ள பணிகள் அமெரிக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும்'' என்று கூறினார்.

அதன்படியே அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் அதிரடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை ராணுவ விமானங்கள் மூலம் வெளியேற்றி வருகிறார். இதில் இந்தியர்களும் அடங்குவர்.
அமெரிக்காவில் ஏறக்குறைய 20 ஆயிரம் இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை 4 போர் விமானங்களில் மொத்தம் 400 பேர் வரை நம் நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கை, கால்களில் விலங்கு மாட்டி போர் விமானங்கள் மூலம் பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். வரும் நாட்களிலும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள இந்தியர்கள் நம் நாட்டுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.
இப்படியான சூழலில் தான் நேற்று முன்தினம் டொனால்ட் டிரம்ப் புதிய திட்டத்தை அறிவித்தார்.
அமெரிக்காவில் குடியுரிமை பெற முதலீட்டாளர்களுக்கான ஈபி - 5 திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. இதன்மூலம் பிறநாடுகளை சேர்ந்தவர்கள் ரூ.9.15 கோடி, பின்தங்கிய இடம் என்றால் ரூ.7 கோடி முதலீடு செய்து 10 அமெரிக்கர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். இதன்மூலம் குடியுரிமையை பெறலாம். இதற்கு மாற்றாக தான் தற்போது டொனால்ட் டிரம்ப் ‛கோல்டு கார்டு' திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டம் இந்தியர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் தொழில் தொடங்கி அங்கேயே குடியுரிமை பெற விரும்புவோருக்கு அதிக தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தான் ‛கோல்ட் கார்டு' திட்டம் பற்றி டொனால்ட் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: அமெரிக்காவில் தற்போது இபி-5 எனும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான குடியுரிமை திட்டம் நடைமுறையில் உள்ளது. இது அவ்வளவாக பலனளிக்கவில்லை. உதாரணமாக சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்கள் அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கின்றனர். ஹார்வர்ட் முதல் வார்டன் ஸ்கூல் ஆஃப் பைனான்ஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கிறார். வேறு நாடுகளில் பிறந்தாலும் அமெரிக்காவில் படித்து இவர்கள் பட்டம் பெறுகிறார்கள்.
அமெரிக்காவில் அவர்களுக்கு பணிக்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய முடியுமா? இல்லையா? என்ற சந்தேகத்தில் அந்த வாய்ப்பை மறுத்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர். இந்தியர்கள் இந்தியா செல்கின்றனர். அங்கு அவர்கள் தொழில் தொடங்கி பெரும் கோடீஸ்வரர்களாக மாறுகின்றனர். அவர்கள் பல ஆயிரம் பேருக்கு வேவைாய்ப்புகளை கொடுக்கின்றனர். இது அமெரிக்க பொருளாதாரத்தில் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. அதே வேளையில் அவர்கள் நம் நாட்டில் இருந்தால் நமது பொருளாதாரத்துக்கு நல்லது. இதனால் தான் ‛ கோல்டு கார்டு' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இந்த ‛கோல்டு கார்டு' திட்டத்தின் மூலம் 5 மில்லியன் டாலர் (ரூ.43.59 கோடி) கட்டணமாக செலுத்தினால் போதும். அமெரிக்காவில் வசிப்பதற்கும், அமெரிக்காவின் குடியுரிமை பெறுவதற்கும் வழிவகுத்து கொடுக்கும். இதன்மூலம் இந்தியா உள்பட பிற நாடுகளில் உள்ளவர்கள் அமெரிக்காவை நோக்கி படையெபடுப்பார்கள். பெரும் பணக்காரர்கள் தான் பெரும்பாலும் இந்த கட்டணத்தை செலுத்துவார்கள் என்பதோடு, அவர்களால் அமெரிக்காவில் தொழில் தொடங்கவும் முடியும். இதன்மூலம் அமெரிக்காவில் படிக்கும் பிற நாடுகளை சேர்ந்த மாணவர்களும் தங்களின் குடியுரிமை மீது சந்தேகம் ஏற்படாமல் கட்டணத்தை செலுத்தி அமெரிக்காவிலேயே தங்கலாம்.
இதன்மூலம் அமெரிக்காவில் படிக்கும் இந்தியர்களின் திறமையை டொனால்ட் டிரம்ப் புரிந்து வைத்துள்ளார். இந்தியர்கள் உள்பட பிற நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் படித்து தொழிலில் உச்சம் தொடுகின்றனர். இவர்களை சொந்த நாட்டிலேயே வைத்து கொள்ள வேண்டும். அதற்கு குடியுரிமை திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் நினைத்துள்ளார். அதன்படியே தற்போது ‛கோல்டு கார்டு' திட்டத்தை டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் ‛கோல்டு கார்டு' திட்டம் பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இந்தியா, சீனா, ஜப்பான் மாணவர்களை சுட்டிக்காட்டியும், அவர்கள் திறமையானவர்கள், அவர்களை நம் நாடு குடியுரிமை கொடுத்து தக்க வைக்க வேண்டும் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார். இதன்மூலம் இந்தியர்கள், சீனர்கள், ஜப்பானியர்களிடம் டொனால்ட் டிரம்ப் பணிந்துள்ளார். அதோடு அவர்கள் இருந்தால் அமெரிக்காவின் பொருளாதாரம் என்பது உச்சத்தில் இருக்கும் என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்
இருப்பினும் இந்த ‛கோல்டு கார்டு' திட்டம் என்பது இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இன்னும் 2 வாரங்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அப்போது இன்னும் கூடுதலாக ஏதேனும் விதிகளை டிரம்ப் கூற இருக்கிறாரா? இல்லையா? தான் இந்த திட்டம் இந்தியர்களுக்கு சாதகமா? பாதகமா? என்பது தெரியவரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications