டிரம்ப் கோபத்தின் பின்னணி! சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்க இந்தியா விரும்பவில்லை- நிபுணர்
வாஷிங்டன்: கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை ஒரு "சிறந்த தலைவர்" என்று பாராட்டினார். ஆனால் இப்போது, அவர் இந்தியாவை "இறந்துவிட்ட பொருளாதாரம்" என்று விமர்சித்துள்ளார். அமெரிக்க வேளாண் நிறுவனங்களுக்கு இந்திய சந்தையில் அனுமதி மறுக்கப்படுவது டிரம்ப்பின் கோபத்திற்குக் காரணம் என்று தெரிகிறது.
இந்த நிலையில்தான், ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேச நான்கு முறை முயற்சி செய்தார். ஆனால், பிரதமர் மோடி அந்த அழைப்புகளை ஏற்க மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது

மோடி ஏன் தொலைபேசி அழைப்பை ஏற்க மறுத்தார்?
பிரதமர் மோடி, டிரம்ப்பின் "தொலைபேசி வலையில்" சிக்க விரும்பவில்லை என்பதுதான் காரணம். அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான ஒரு வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப், வியட்நாம் தலைவருடன் தொலைபேசியில் பேசியபோது, ஒப்பந்தம் நிறைவடைவதற்கு முன்பே அதை டிரம்ப் சமூக ஊடகத்தில் அறிவித்தார். அதேபோல், டிரம்ப் தனது தொலைபேசி உரையாடல்களைப் பயன்படுத்தி இந்தியாவின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்று பிரதமர் மோடி நினைப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்க நிபுணரின் கருத்து
நியூயார்க்கில் உள்ள இந்தியா-சீனா இன்ஸ்டிடியூட்டின் துணை இயக்குநர் மார்க் ஃப்ரேசியர் கூறுகையில், "இந்தோ-பசிபிக் சீரமைப்பு என்ற அமெரிக்காவின் வியூகம், சீனாவைக் கட்டுப்படுத்துவதில்தான் உள்ளது. அதற்கு இந்தியாவின் தயவு அமெரிக்காவிற்கு தேவை.ஆனால் அமெரிக்கா இப்போது இந்த வியூகத்தில் சரிவடைந்துள்ளது. இந்தியா சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்க விரும்பவில்லை." என்று கூறினார்.
வர்த்தக உறவுகளில் பதற்றம்
அமெரிக்காவிற்கு இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 20% ஆடைகள், நகைகள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் அடங்கும். ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக அமெரிக்கா இந்த கூடுதல் வரியை விதித்துள்ளது. இது இந்தியாவின் 48 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க ஏற்றுமதியைப் நேரடியாகப் பாதிக்கும். பிரதமர் மோடிக்கும், டிரம்புக்கும் இடையிலான கடைசி தொலைபேசி உரையாடல் ஜூன் 17ம் தேதி, அன்று நடந்தது.












Click it and Unblock the Notifications