அமெரிக்கா அட்டூழியம் லட்சத்தீவு அருகே அத்துமீறி நுழைந்த போர்க்கப்பல்! இந்திய உரிமைக்கு பகிரங்க சவால்
வாஷிங்டன்: இந்திய அரசின் அனுமதி இல்லாமல் அமெரிக்க போர்க் கப்பல் லட்சத்தீவு அருகே நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அமெரிக்க கடற்படை வெளிப்படையாகவே தெரிவித்து அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.
ப்ரீடம் ஆப் நேவிகேஷன் ஆபரேஷன் ("FONOP") என்ற பெயரில் ராணுவ "ஆபரேஷன்" நடத்தியுள்ளது அமெரிக்க போர்க்கப்பல்.
அமெரிக்க கடற்படை 7வது ப்ளீட் தளபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏப்ரல் 7 ம் தேதி, யுஎஸ்எஸ் ஜான் பால் ஜோன்ஸ் போர்க் கப்பல் இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு [EEZ] உள்ளே, லட்சத்தீவு தீவுகளுக்கு மேற்கே சுமார் 130 கடல் மைல் தொலைவில் ரோந்து சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா அதிகமாக ஆசைப்படுகிறதாம்
அந்த அறிக்கையிலுள்ள அம்சங்களை பாருங்கள்: நமது உரிமைகள், சுதந்திரம், சர்வதேச சட்டங்களின்படி வழங்கப்பட்டுள்ள உரிமை ஆகியவற்றை இதன் மூலம் உறுதி செய்துள்ளோம். இந்தியா தங்களது எல்லையை தாண்டி "கூடுதலாக கடல்சார் உரிமையை கோருவதை எதிர்க்கும்" வகையில் இந்த ரோந்து அமைந்துள்ளது. இவ்வாறு வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது அந்த செய்திக்குறிப்பு.

மத்திய அரசு நிலைப்பாடு என்ன
இதுவரை இந்திய அரசிடமிருந்து இதற்கான பதில் வரவில்லை. அமெரிக்க போர்க் கப்பல் இந்திய எல்லைக்குள் அனுமதியின்றி வந்தபோது இந்திய கடற்படை அதை எதிர்த்ததா என்ற தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

விதிமீறல்
இந்தியாவும் அமெரிக்காவும் கடலோர பிராந்தியங்களுக்கு அடிப்படை கொள்கை வேறுபாடுகளைக் கொண்டுள்ளன, வெளிநாட்டு ராணுவக் கப்பல்கள் தங்கள் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு உள்ளே வருவதையும், ராணுவ நடவடிக்கைகளை நடத்துவதையும், அவை தடுக்கின்றன. ஆனால் இந்த முறை அமெரிக்க போர்க்கப்பல் இந்த விதிமுறையை மீறி உள்ளே வந்துள்ளது.

ஐ.நா. கடல் சட்டங்கள் தொடர்பான மாநாடு
1995 ஆம் ஆண்டில் ஐ.நா. கடல் சட்டத்தின் மாநாட்டை (யு.என்.சி.எல்.ஓ.எஸ்) இந்தியா அங்கீகரித்துள்ளது. அந்த மாநாட்டு முடிவின்படி "பிற மாநிலங்களுக்கு பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அங்கீகாரம் அளிக்கவில்லை" என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மலபார் பயிற்சி என்னாச்சு
சமீபத்தில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து மலபார் பயிற்சி என்ற பெயரில் வங்க கடலில் கப்பற்படை பயிற்சி மேற்கொண்டனர். சீனாவுக்கு எதிரான முன்னெடுப்பாக இது பார்க்கப்பட்டது. சீனா இந்த பிராந்தியத்தில் கடல்சார் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் இந்தியா நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. எனவே ஓரணியில் திரண்டு இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியபோது, அமெரிக்கா, இந்தியாவின் கடல் பரப்புக்குள் ஊடுருவியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.












Click it and Unblock the Notifications