பட்ஜெட் தாக்கலாவதில் சிக்கல்.. குழப்பப்பத்தில் எம்பிக்கள்.. அடுத்து என்ன நடக்கும்?
வாஷிங்டன்: அமெரிக்காவில் பட்ஜெட்டை ஒப்புதல் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இதனால் அமெரிக்கா ஷட் டவுன் ஆகியுள்ளது. கடந்த முறை அமெரிக்கா ஷட் டவுன் ஆன போது, அது பல வாரங்கள் வரை நீடித்தது. மேலும், சர்வதேச அளவிலும் இதன் பாதிப்புகள் எதிரொலித்தது. இதனால் இந்த முறை என்ன நடக்குமோ என்ற அச்சம் அமெரிக்கர்களிடையே ஏற்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா பல வாரங்கள் ஷட் டவுன் ஆகியிருந்தது. இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. இதற்கிடையே அமெரிக்கா இப்போது மீண்டும் ஷட் டவுன் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை முதல் அமெரிக்கா பகுதியளவு ஷட் டவுன் ஆகியுள்ளது.

அமெரிக்காவில் சிக்கல்
2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை இரவு அங்கீகரித்து இருக்க வேண்டும். இருப்பினும், அமெரிக்க நாடாளுமன்றம் அதை அங்கீகரிக்கவில்லை. இதனால் பகுதியளவு ஷட் டவுன் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் அமைதியாகப் போராடிய இருவரைக் குடியேற்ற ஏஜெண்டுகள் சுட்டுக் கொன்றனர். இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், குடியேற்றத் துறைக்கான நிதியைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதன் காரணமாகவே பட்ஜெட் நிறைவேறுவதில் தற்காலிகத் தடை ஏற்பட்டது.
எவ்வளவு காலம் நீடிக்கும்
இருப்பினும், முந்தைய ஷட் டவுன் போல இது வாரக் கணக்கில் நீடிக்காது. அடுத்த வாரமே இந்த ஷட் டவுன் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. அமெரிக்க மேல்சபையான செனட்டில் ஒப்புதல் தரப்பட்டுள்ள இந்தச் சட்டம் அடுத்த வாரம் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளிக்கும் என்பதால், இந்த ஷட் டவுன் குறுகியகாலமே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, செனட் வெள்ளிக்கிழமை ஒரு நிதித் தொகுப்பை நிறைவேற்றியது. இது செப்டம்பர் மாதம் வரை பல பெடரல் அமைப்புகளுக்கு நிதி வழங்குகிறது. அத்துடன், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகளுக்கு இரண்டு வாரக் காலத் தற்காலிக நிதியை வழங்குகிறது. இதனால் அத்தியாவசியமான பல அமெரிக்க பெடரல் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படும். இருப்பினும், சுமார் 75% கூட்டாட்சி துறைகள் இந்த ஷட் டவுன் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகக் கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளிலும் இதன் தாக்கம் உணரப்படும்.
கடும் தாக்கு
அதேநேரம் டிரம்ப் அரசின் செயல்பாடுகளை செனட் ஜனநாயகக் கட்சி சிறுபான்மை கொறடாவான டிக் டர்பின் கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர், "போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குழந்தைகளைத் துஷ்பிரயோகம் செய்பவர்கள் மற்றும் கடத்தல்காரர்களைப் பிடிப்பதற்குப் பதிலாக, டிரம்ப் நிர்வாகம் சிகாகோ மற்றும் மினியாபொலிஸில் அமைதியாகப் போராட்டம் நடத்துவோரைக் குறிவைக்கிறது. இதனால் தேவையில்லாமல் நிதி வீணாகிறது. இந்த நிர்வாகம் அமெரிக்கர்களைப் பாதுகாப்பற்றவர்களாகவே மாற்றுகிறது" என்று கடுமையாகச் சாடினார்.
அடுத்து என்ன?
இப்போது அமெரிக்கா பகுதியளவு ஷட் டவுன் ஆகியுள்ள சூழலில், இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டில நாட்களே இந்த ஷட் டவுன் இருக்கும் என்றாலும் கூட இந்த இடைப்பட்ட காலத்திற்கு அமெரிக்க பெடரல் ஊழியர்கள் ஊதியம் இல்லாமல் வேலை செய்ய நேரிடும். எனினும், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் இருவருமே இந்த இடையூறுகள் பிரதிநிதிகள் சபை செனட் தொகுப்பை அங்கீகரிக்கும் வரை குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும் என்று நம்புகின்றனர். அதிபர் டிரம்ப் செனட்டின் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், பிரதிநிதிகள் சபை விரைவாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications