"இதுதான் டிரம்ப் மாடல்.. ஏற்க முடியலைனா இந்தியா தான் அனுபவிக்கணும்.." அமெரிக்கா அடாவடி பேச்சு
வாஷிங்டன்: இந்தியா மீது டிரம்ப் அரசு 50% வரியை விதித்துள்ளது. இது இரு நாட்டு உறவுகளையும் வர்த்தகத்தையும் கடுமையா பாதித்துள்ளது. இது மட்டுமில்லாமல் டிரம்ப் தரப்பு தொடர்ச்சியாக இந்தியாவை விமர்சித்தும் வகையிலேயே பேசி வருகிறது. இதற்கிடையே டிரம்பின் இந்த புதிய மாடலை இந்தியா ஏற்றுக் கொண்டே தீர வேண்டும் என்றும் இல்லையென்றால் டிரம்பிற்கே சிக்கல் என்றும் அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லட்னிக் சாடியுள்ளார்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் கடந்த மாதம் இந்தியா மீது 50% வரிகளை அறிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் தான் உக்ரைன் போர் தொடர காரணம் எனச் சொல்லி இந்த வரிகளை விதித்தார். டிரம்ப் வரிகள் இரு நாட்டு உறவை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும், இதனால் அமெரிக்கா உடனான வர்த்தகம் 40% வரை பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

டிரம்ப் தரப்பு
அதேநேரம் வரி விதித்தது மட்டுமில்லாமல்.. டிரம்ப் தரப்பு தொடர்ச்சியாக இந்தியாவை விமர்சிக்கும் வகையிலான கருத்துகளைப் பேசி வருகிறது. இரு நாட்டு உறவு ஏற்கனவே மோசமாக இருக்கும் சூழலில், டிரம்ப் தரப்பின் இந்த பேச்சு இரு தரப்பு உறவை மேலும் மேலும் மோசமாக்குவது போலவே இருக்கிறது.
இதற்கிடையே அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லட்னிக் மீண்டும் இந்தியாவைச் சீண்டும் வகையில் பேசியுள்ளார். அமெரிக்காவுக்கு எல்லா பொருட்களையும் தடையில்லாமல் ஏற்றுமதி செய்யும் இந்தியா, தனது நாட்டிற்கு வெளிநாட்டுப் பொருட்கள் வருவதற்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாக அவர் விமர்சித்தார்.
நியாயம் இல்லை
இது தொடர்பாக லட்னிக் மேலும், "தாங்கள் 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாடு என இந்தியா பெருமை பேசுகிறது. ஆனால், அந்த 140 கோடி மக்கள் ஏன் ஒரு டன் சோளத்தைக் கூட அமெரிக்காவில் இருந்து வாங்க மறுக்கிறார்கள்? அவர்களின் அனைத்து பொருட்களையும் நம்மிடம் விற்கும் அவர்கள், சோளத்தைக் கூட வாங்க மறுப்பது உங்களுக்குத் தவறாகத் தோன்றவில்லையா?
இந்தியா எல்லாவற்றுக்கும் வரிகளை விதிக்கிறது. அதனால் தான் அதிபர் டிரம்ப் வரிகளைக் குறைக்கச் சொல்லிக் கேட்கிறார்.. மேலும், இந்தியா பல தடைகளையும் வரிகளை விதிப்பதால் இந்தியா மீது டிரம்ப் விதித்த 50% வரியில் நியாயம் இருப்பதாகவே உணர்கிறேன். எந்தவொரு வர்த்தக உறவாக இருந்தாலும் நேர்மை தேவை என்றே நினைக்கிறேன்.
இதுதான் டிரம்ப் மாடல்
நாங்கள் உங்களை எப்படி நடத்துகிறோமோ, அதேபோல எங்களையும் நடத்துங்கள். பல வருடத் தவறுகளை நாம் சரிசெய்ய வேண்டும். எனவே இது சரியாகும் வரை நாங்கள் பரஸ்பர வரிகளை விதிக்கிறோம். இதுவே டிரம்பின் மாடல். இதை நீங்கள் ஏற்றுக் கொண்டால், உலகின் மிகப்பெரிய மார்கெட்டில் (அமெரிக்காவைச் சொல்கிறார்) உங்களால் வர்த்தகம் செய்ய முடியும். இல்லையென்றால் பிரச்சனைகளை அனுபவியுங்கள்" என்று இந்தியாவைச் சீண்டும் வகையில் பேசியிருக்கிறார்.
இந்தியா அமெரிக்கா உறவு
டிரம்பின் இந்த அடாவடி நடவடிக்கை இந்தியா அமெரிக்கா உறவைக் கடுமையாகப் பாதித்துள்ளது.. ரஷ்ய கச்சா எண்ணெய் மட்டுமின்றி, இந்தியா அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தையில் நிலவி வந்த இழுபறியும் கூட டிரம்பின் வரிக்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை தனது நண்பர் என்று குறிப்பிட்ட டிரம்ப், அவருடன் பேச ஆவலாக இருப்பதாக தெரிவித்தார். இதன் மூலம் வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என தெரிகிறது. வர்த்தக பேச்சுவார்த்தை சிறப்பாக முடிந்தாலும் கூட வரிகள் குறைக்கப்படலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications