டிரம்ப்பிற்கு எதிராக அணி வகுக்கும் அமெரிக்க மாகாணங்கள்.. எதிர்பார்க்காத இடத்தில் வைக்கப்பட்ட செக்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது இஷ்டத்திற்கு ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். அதை இப்போது அவர் நிறுத்தி வைத்திருக்கும் போதிலும், மீண்டும் 3 மாதங்களில் வரி அமலுக்கு வந்துவிடும் ஆபத்து இருக்கிறது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பிற்கு எதிராக அமெரிக்க மாகாணங்களே வழக்கு தொடர்ந்துள்ளன. இது அமெரிக்காவில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இஷ்டத்திற்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். டிரம்ப்பின் வரி அறிவிப்புகள் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இது சர்வதேச வர்த்தகத்தையே முழுமையாகப் பாதிக்கிறது. ஏனென்றால் டிரம்ப் தனது வர்த்தகக் கொள்கைகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார்.

டிரம்ப்பிற்கு எதிராக வழக்கு
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக அமெரிக்க மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. ஏதோ ஓரிரு மாகாணங்கள் மட்டுமில்லை.. மொத்தம் 12 மாகாணங்கள் டிரம்ப்பிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளன. அதில் பெரும்பாலான மாகாணங்கள் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி ஆட்சியில் இருக்கும் மாகாணங்களாகும். அதிபர் டிரம்ப் தடாலடியாக அறிவித்த வரிகளுக்கு எதிராக இந்த மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
அதிபர் டிரம்ப்பிற்கு தனித்தனியாக இதுபோல வரிகளை அறிவிக்க அதிகாரம் இல்லை என்றும் இந்த வரிகளை அறிவிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்பதே அவர்களின் அடிப்படை வாதமாக இருக்கிறது. இது தொடர்பாகவே இந்த மாகாணங்கள் டிரம்ப்பிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளன. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ரெசிப்ரோகல் வரியை அறிவிக்கும் அதிகாரம் டிரம்ப்பிற்கு இல்லை என்பதே அவர்கள் வழக்கு.
வழக்கறிஞர்கள் சொல்வது என்ன
இது தொடர்பாக அமெரிக்கச் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் இந்த மாகாணங்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் கூறுகையில், "இப்போது வந்துள்ள வரி உத்தரவுகள் அனைத்தும் நமது நாட்டின் வர்த்தகக் கொள்கையைப் பிரதிபலிக்கின்றன. ஆனால், அதிபர் அதைச் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துவதை விடத் தனது சொந்த விருப்ப வெறுப்புகளை மனதில் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும், 1977ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, அவசரக்கால நடவடிக்கைகளைப் பயன்படுத்தி டிரம்ப்பால் வரிகளை அறிவிக்க முடியாது.. இந்த அதிகாரம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கே இருக்கிறது. இதை அமெரிக்க அரசியலமைப்பும் உறுதி செய்கிறது.
பொருளாதாரப் பாதிப்பு
அமெரிக்காவில் நுழையும் பொருட்களுக்கு மிகப் பெரிய வரி அறிவிக்கப்பட்டுள்ளது. அவையும் கூட மாறிக்கொண்டே இருக்கிறது. சும்மா ஏதோ காரணத்தைக் கூறி எமர்ஜென்சி நிலையை டிரம்ப் அறிவித்திருக்கிறார். அதன் மூலம் அரசியலமைப்பு ஒழுங்கையே அவர் தலைகீழாக மாற்றிவிட்டார். இது அமெரிக்கப் பொருளாதாரத்தில் மிகக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த மாகாணங்கள்
அரிசோனா, நியூயார்க், மினசோட்டா, இல்லினாய்ஸ், கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், மைனே, நெவாடா, நியூ மெக்ஸிகோ, வெர்மான்ட் மற்றும் ஓரிகான் ஆகிய மாகாணங்கள் டிரம்ப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளன. இது தவிர கலிபோர்னியா கடந்த வாரம் டிரம்ப்பிற்கு எதிராகத் தனியாக இதேபோல ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளது. டிரம்ப்பின் வரி விதிப்பு என்பது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவை மிக மோசமாகப் பாதிப்பதாக ஆளுநர் கேவின் நியூசம் குறிப்பிட்டார்.
சட்டவிரோதம்
இது தொடர்பாக அரிசோனா அட்டர்னி ஜெனரல் கிறிஸ் மேயஸ் கூறுகையில், "அதிபர் டிரம்ப்பின் இந்த வரிகள் அமெரிக்கப் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கிறது. மேலும், இது முழுக்க முழுக்க சட்டவிரோதமானது. இது குறித்து வெள்ளை மாளிகை என்ன தான் பக்கம் பக்கமாக விளக்கம் கொடுத்தாலும் இதனால் பாதிக்கப்படுவது அமெரிக்க மக்கள்தான். வரியால் அமெரிக்கர்கள் வாங்கும் பொருட்களின் விலை தான் அதிகரிக்கும்" என்றார்.
டிரம்ப்பும் வரியும்
முன்னதாக கடந்த முதலில் ஏப்ரல் வாரம் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்போவதாக அறிவித்தார். இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் டிரம்ப் இந்த வரியை அறிவித்திருந்தார். ஆனால், அடுத்த வாரமே அமெரிக்க டிரஷரி கடன் பத்திரங்கள் வரலாறு காணாத அளவுக்கு விற்கப்பட்டது. இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு அழுத்தம் ஏற்பட்ட நிலையில், வேறு வழியில்லாமல் டிரம்ப் நிர்வாகம் வரிகளை நிறுத்தி வைக்க முடிவு செய்தது.
ஏப்ரல் 2வது வாரம் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் பெரிய ஒரு யூடர்ன் போட்டார். ரெசிப்ரோக்கல் வரியை அடுத்த 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக அறிவித்த டிரம்ப், அதேநேரம் சீனா மீதான வரிகளை மட்டும் அதிகரித்தார். அதற்குச் சீனாவும் பதிலடி கொடுத்தது. இப்படி இரு நாடுகளும் மாறி மாறி வரிகளை அறிவிக்கவே அது வர்த்தகப் போராக மாறிவிட்டது. மறுபுறம் சுமார் 3 மாதங்கள் டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரி டிரம்ப் நிறுத்திவைத்திருக்கும் நிலையில், அதற்குள் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தத்தைப் போட உலகின் பல்வேறு நாடுகளும் முயன்று வருகிறது.

3521% வரி
இது ஒரு பக்கம் இருக்கக் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் நிர்வாகம் மேலும் புதிய வரி அறிவிப்புகளை வெளியிட்டன. அதாவது சீன நிறுவனங்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும் அங்கிருந்து சோலார் பொருட்களை ஏற்றுமதி செய்து வரிகளைத் தவிர்ப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தது. இதைக் கருத்தில் கொண்டு புதிய வரிகளையும் அறிவித்தது. அதிகபட்சமாக கம்போடியாவுக்கு 3,521 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. வியட்நாமிற்கு 395.9 சதவீதம், தாய்லாந்திற்கு 375.2 சதவீதம், மலேசியாவுக்கு 34.4 சதவீத வரிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கர்களையே பாதிக்கும்
டிரம்ப்பின் வரிகளை அவரது கட்சியினர் ஆதரித்தாலும், பொருளாதார வல்லுநர்கள் இதை எச்சரித்தே வருகிறார்கள். அதாவது டிரம்ப்பின் வரி விதிப்பால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும். இதனால் அமெரிக்கர்களே அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதே அவர்கள் வாதம்.
டிரம்ப் இந்த வரிகளை அறிவிக்க மற்றொரு காரணத்தையும் சொன்னார். அதாவது தொழில் நிறுவனங்கள் அமெரிக்காவில் ஆலைகளை நிறுவி உற்பத்தியைத் தொடங்க வேண்டுமாம். இதன் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது அவரது வாதம். ஆனால், இதில் பிரச்சினை என்னவென்றால் அமெரிக்காவில் தொழிற்சாலை அமைக்கப்படும்போது ஊழியர்களுக்கு அதிக ஊதியம் தர வேண்டும்.. அது செலவுகள் அதிகரிக்கும்.. இதனால் மீண்டும் அமெரிக்காவில் விற்பனையாகும் பொருட்களின் விலையே அதிகரிக்கும். இதனால் அமெரிக்க மக்களே பாதிக்கப்படுவார்கள் என்பதே பொருளாதார வல்லுநர்கள் முன்வைக்கும் முக்கிய வாதமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications