அமெரிக்க தேர்தல்.. ரிசல்ட் வெளியாக வேண்டியுள்ள மாகாணங்களில் யார் முன்னிலை?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நிறைவடைந்து தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடந்து வருகிறது.
இப்போதைய நிலைமையில் டொனால்ட் ட்ரம்ப் அல்லது அவரை எதிர்க்கும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய இருவரில் ஒருவரும் 270 என்ற பிரதிநிதிகள் ஓட்டுக்களை பெறவில்லை. அதை பெற்றவர்தான் அதிபராக முடியும்.
இருப்பினும் பிடன் நல்ல முன்னிலையில் உள்ளார். 264 ஓட்டுக்களை பிடன் பெற்றார். டிரம்ப் 214 ஓட்டுக்களை பெற்றிருந்தார்.
இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மாகாணங்களில் யார் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை, பாருங்கள்:
ஜார்ஜியா - 16 வாக்குகள்:
டிரம்ப் இங்கு முன்னிலையில் இருக்கிறார், ஆனால் ஜோ பிடன் இடைவெளியைக் குறைத்துள்ளார். தற்போதைய நிலைமையில் 2,000 க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் நிலைமை உள்ளது. இன்னும் சுமார் 15,000 வாக்குகள் எஞ்சியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்டன என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். அமெரிக்க நேரப்படி, வியாழக்கிழமை மாலை அல்லது வெள்ளிக்கிழமை காலை முடிவு கிடைக்கும்.
பென்சில்வேனியா - 20 வாக்குகள்:
டிரம்ப் முன்னால் இருக்கிறார், ஆனால் பிடன் இடைவெளியைக் குறைத்துவிட்டார். ஒரு கட்டத்தில், 5 லட்சத்திற்கும் அதிகமான முன்னணியில் இருந்த டிரம்ப் இப்போது 26,000 வாக்குகள் முன்னிலை என குறைந்துவிட்டார். இன்னும் 550,000 வாக்குகள் இன்னும் எஞ்சியுள்ளன. இவை ஜனநாயக கட்சிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பிடன் கை ஓங்க ஆரம்பித்துள்ளது.
அரிசோனா - 11 வாக்குகள்:
பிடன் 46,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். டிரம்ப் சீராக முன்னேறி வருகிறார். இன்னும் 470,000 வாக்குகள் எண்ணப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது வியாழக்கிழமை மாலை நிலவரம்.
நெவாடா - 6 வாக்குகள்:
பிடன் கிட்டத்தட்ட 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். வியாழக்கிழமை காலை முதல் சிறிய முன்னிலை பெற்றார். இன்னும் சுமார் 190,000 வாக்குகள் எஞ்சியுள்ளன என்று அதிகாரிகள் கூறுகின்றனர். லாஸ் வேகாஸை உள்ளடக்கிய கிளார்க் கவுண்டியில் இருந்து 90% வாக்குகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மெயில் வாக்குகள்.