பிரதமர் மோடியை சந்திக்கும் டொனால்ட் டிரம்ப்! அமெரிக்க அதிபர் தேர்தல் வேற நெருங்குதே.. என்ன காரணம்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் சமீபத்திய கருத்து கணிப்புகளில் கமலா ஹாரிஸை விட பின்தங்கி உள்ளார். இந்நிலையில் தான் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் ஓட்டுகளை குறிவைத்து டொனால்ட் டிரம்ப் அடுத்த வாரம் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்கி உள்ளார். தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரசாரம் தீவிரமாகி வருகிறது. இரு தலைவர்களும் தொடர்ந்து பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் சில நாட்களுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் நேரடியாக விவாதம் நடத்தினர். இந்த விவாதத்தில் குடியுரிமை, பொருளாதார நிலைமை உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் விவாதித்தனர். இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதாக பல செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் களம் மாறியுள்ளது. முதலில் டொனால்ட் டிரம்புக்கு அதிக ஆதரவு இருந்த நிலையில் தற்போது கமலா ஹாரிசுக்கு அதிக ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டொனால்ட் டிரம்புக்கு 43 சதவீதம் பேரும், கமலா ஹாரிசுக்கு 48 சதவீத ஆதரவும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தான் அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியை, டொனால்ட் டிரம்ப் நேரில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது மிசிகன் நகரில் நடந்த பிரசாரத்தில் இதனை டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை அடுத்த வாரம் சந்தித்து பேச உள்ளேன். இந்த வேளையில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தகம் பற்றி பேச உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கூட பிரதமர் மோடியை சந்திப்பது என்பது அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியினர் மத்தியில் டொனால்ட் டிரம்ப்பின் செல்வாக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் தான் டொனால்ட் டிரம்ப் இந்த சந்திப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் பிரதமர் மோடி - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
பிரதமர் மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக செப்டம்பர் 21ம் தேதி அமெரிக்க செல்கிறார். அங்கு அவர் குவாட் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்துகிறார். இந்த மாநாடு என்பது டெல்வாரில் நடைபெற உள்ளது. மாநாட்டில் ஜோ பைடன், பிரதமர் மோடியை தவிர ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பென்ஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். அதன்பிறகு 22ம் தேதி பிரதமர் மோடி நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேச உள்ளார்.
இந்த வேளையில் தான் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியும், டொனால்ட் டிரம்பும் இதற்கு முன்பு கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சந்தித்தனர். அப்போது டொனால்ட் டிரம்ப் தனது மனைவியுடன் இந்தியா வந்திருந்தார். அதற்கு முன்பாக 2019ம் ஆண்டில் பிரதமர் மோடியும், டொனால்ட் டிரம்ப்பும் ஜப்பானின் ஒசாகாவில் சந்தித்து பேசி இருந்தனர். ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு என்பது நடந்தது. அதற்கு முன்பாக என்றால் 2017 ல் ASEAN மாநாட்டின்போது மணிலாவில் வைத்து இருவரும் சந்தித்து பேசி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications