போருக்கு நடுவே.. இஸ்ரேல் செல்லும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. உற்று கவனிக்கும் சர்வதேச நாடுகள்
வாஷிங்டன்: இஸ்ரேல் - ஹமாஸ் இயக்கத்தினர் இடையேயான போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்ல உள்ளார். காசா பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்த நிலையில், ஜோ பைடன் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினர் கடந்த 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினை ஒழித்து கட்டுவோம் என போரில் குதித்தது. இதனால் கடந்த 10 நாட்களாக காசா மீது வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.

குண்டு மழை பொழிந்து காசாவின் வானுயர்ந்த கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கியிருக்கிறது. தரைவழி தாக்குதலுக்கும் ரெடியாக இருக்கும் இஸ்ரேல், அதற்காக காசா நகர மக்களை தெற்கு பகுதிக்கு செல்லுமாறு கெடு விதித்து இருக்கிறது. இதனால் மூட்டை முடிச்சுகளுடன் லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக இடைவிடாது நடந்து வரும் இந்த போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதில் காசா தரப்பில் இதுவரை சுமார் 2,750 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 9,700-க்கு அதிகமானோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இஸ்ரேல் தரப்பில் 1,400-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதல் நடத்தினாலும் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து இருந்தார்.
இத்தனைக்கும் இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவை அமெரிக்கா வழங்கி வருகிறது. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் நாளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் செல்ல உள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக ஜோ பைடன் தனது கொலராடோ பயணத்தை ஒத்திவைத்துள்ளார். இஸ்ரேல் - காசா இடையே இதுவரை இல்லாத அளவுக்கு போர் உச்சம் அடைந்துள்ள சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இஸ்ரேல் பயணம் சர்வதேச அளவில் முக்கியத்தும் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications