அமெரிக்க அதிபர் தேர்தல்.. இந்த ஊரில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது.. வென்றது யார் தெரியுமா?
வாஷிங்டன்: அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபர் தேர்தல் உள்ளூர் அளவிலேயே நடத்தப்படும். இதனால் எந்த ஊர்களில் எல்லாம் வாக்குப்பதிவு முடிந்துவிட்டதோ.. அங்கெல்லாம் உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்படி அங்கு ஒரு கிராமத்தில் வாக்கு எண்ணிக்கையே முடிந்துவிட்டது. அந்த ஊரில் வென்றது யார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்கா தனது புதிய அதிபரைத் தேர்வு செய்யத் தயாராகிவிட்டது. அதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்கத் தேர்தல்: நமது நாட்டில் பொதுவாக வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்படும். சில நாட்களுக்கு பிறகே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். நமது நாட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்பதால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்தில் முடிவுகள் தெரிந்துவிடும். ஆனால், அமெரிக்காவில் இன்னும் வாக்குச்சீட்டு முறை தான். இதனால் வாக்கு எண்ணிக்கை முடிய நாள் கணக்கில் கூட ஆகும்.
அதேபோல அமெரிக்காவில் வாக்கு எண்ணிக்கைக்கு என்று தனியாக எல்லாம் ஒரு நாள் இருக்காது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். மேலும், அமெரிக்காவில் அதிபர் தேர்தலை நடத்தத் தனியாக எல்லாம் அமைப்பு இல்லை. உள்ளூர் அமைப்புகளே தான் அதிபர் தேர்தலை நடத்தும். இதனால் ஒவ்வொரு பகுதிக்கும் டைம், ரூல்ஸ் என்று அனைத்தும் மாறுபடும். மேலும், ஒவ்வொரு பகுதியிலும் வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே வாக்கு எண்ணிக்கையும் நடக்கும். அதன்படி இப்போது ஒரு கிராமத்தில் வாக்கு எண்ணிக்கையே முடிந்துவிட்டது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்கக் கிராமம்: அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் உள்ள ஒரு மிகச் சிறிய கிராமம் தான் டிக்ஸ்வில்லே நாட்ச். பல ஆண்டுகளாகவே இங்கு தான் வாக்குப்பதிவு முதலில் முடியும். இங்குள்ள குறைந்த மக்கள்தொகை தான் இதற்குக் காரணம். குறைவு என்றால் என்ன ஒரு 1000 பேர் இருப்பார்களா என் நீங்கள் கேட்கலாம். ஆனால், இங்குள்ள மொத்த மக்கள் தொகை வெறும் 6 தான். ஆம், வெறும் 6 பேர் தான் இந்த ஊரில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு அதிபர் தேர்தல் வாக்குப்பதிவும் நடந்துள்ளது.
நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தின் விதிகளின்படி எந்த ஊரில் எல்லாம் மக்கள்தொகை 100க்கு கீழ் இருக்கிறதோ.. அந்த ஊர்களில் நள்ளிரவிலேயே வாக்குப்பதிவு நடத்தலாம் என்ற விதி இருக்கிறது. அதன்படி இந்த டிக்ஸ்வில்லே நாட்ச்சில் நள்ளிரவில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவு தொடங்கிய சற்று நேரத்தில் ஆறு பேரும் வாக்களித்துவிட்டனர். அதன் பிறகு வாக்கு எண்ணிக்கையும் நடந்து முடிந்துவிட்டது.
வெல்வது யார்: பதிவான ஆறு வாக்குகளில் 3 பேர் டிரம்ப்பிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேநேரம் 3 பேர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இது சிறிய கிராம் என்றாலும் இந்த கிராமத்தில் கூட இருவரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
கடும் போட்டி: போட்டி எந்தளவுக்கு கடுமையாக இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது. கடந்த 2020 அதிபர் தேர்தலில் இந்த கிராமத்தில் பதிவான 6 வாக்குகளும் ஜோ பைடனுக்கு கிடைத்திருந்தது. ஆனால், இந்த முறை இரு கட்சிகளுக்கும் வாக்குகள் பிரிந்துள்ளது கவனிக்கதக்கது.












Click it and Unblock the Notifications