அமெரிக்க அதிபர் தேர்தல்: பணக்கார இந்துத்துவவாதிகளின் பேராதரவை பெற்ற டொனால்ட் டிரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் இந்தியர்கள் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்பது தொடர்பான விவாதமும் களைகட்டுகிறது. அமெரிக்கா வாழ் பணக்கார இந்துத்துவவாதிகளின் தேர்வாக டொனால்ட் டிரம்ப்தான் இருக்கிறார் என்பது பொதுவான கருத்து.
Recommended Video
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் களத்தில் உள்ளனர். இந்தியரான கமலா ஹாரிஸை துணை அதிபராக ஜோ பிடன் முன்னிறுத்தியுள்ளார்.
இதனால் அமெரிக்கா வாழ் இந்தியர்களின் வாக்குகள் கணிசமாக ஜோ பிடனுக்கு கிடைக்கும் என்கிற கருத்து உள்ளது. சில கருத்து கணிப்புகளும் கூட ஜோ பிடனுக்கே அமெரிக்கா வாழ் இந்தியர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்திருக்கின்றன.
மக்கள் போடும் ஓட்டு இருக்கட்டும்.. அதை விட முக்கியமானதை டிரம்ப், பிடன் ஜெயிச்சாக வேண்டும்!
டிரம்ப் கெடுபிடி நடவடிக்கைகள்
ஜோ பிடனை தேர்வு செய்ய காரணமே டொனால் டிரம்ப்பின் கெடுபிடியான நடவடிக்கைகள்தான் என்கின்றனர் அமெரிக்கா வாழ் இந்தியர்கள். எச்1பி விசா, வரிவிலக்கு போன்றவற்றில் டிரம்ப் காட்டிய கெடுபிடிகள் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன.
அதிருப்தியில் குடியேறிகள்
அதேபோல் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களிடம் டிரம்ப் அரசு காட்டும் ஈவிரக்கமற்ற கொடூரமான முறைகள் ஒட்டுமொத்தமாக இந்தியர்கள் உள்ளிட்ட குடியேறிகளை மிகவும் அதிருப்தி அடையத்தான் வைத்திருக்கிறது. அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிற கருப்பர் இனத்தவர் மீதான ஒடுக்குமுறைகள் இந்தியர்கள் உள்ளிட்டோரை ஜோ பிடன் பக்கம் இயல்பாகவே தள்ளிவிட்டிருக்கிறது.
டிரம்ப்- இந்துத்துவா ஆதரவு
இத்தனை இருந்தாலும் இன்னொரு மிக மிக உண்மையான ஒரு கள யதார்த்தமும் சுட்டிக்காட்டப்படுகிறது. அமெரிக்கா வாழ் பணக்கார இந்துத்துவவாதிகள் வலதுசாரியான டிரம்ப்பைத்தான் இன்னமும் ஆதரிக்கிறார்கள். இந்தியா, பிரதமர் மோடி ஆதரவு என்கிற அம்சங்களில்தான் டிரம்ப்புடன் இவர்கள் இணைகிறார்கள். மோடியின் அமெரிக்கா பயணத்தின் போது காட்டிய அதே பிணைப்பை டிரம்ப்பின் தேர்தல் வெற்றி மீதான அக்கறையிலும் இந்த குழுவினர் காட்டுகின்றனர் என்பது அமெரிக்கா வாழ் இந்தியர்களின் கருத்து.
இந்துத்துவா செல்வாக்கு
இதனால் அமெரிக்கா வாழ் இந்தியர்களின் பொதுப்புத்தியில் ஜோ பிடன் வெல்ல வேண்டும் என்கிற சிந்தனை இருக்கிறது; ஆனால் இந்தியர்களிடம் செல்வாக்கு செலுத்தும் இந்த இந்துத்துவவாதிகளின் போக்கு களத்தில் வேறு மாதிரியான ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.