திடீரென பல இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா! அதிபர் தேர்தல் வேற நெருங்குதே! என்ன காரணம்?
வாஷிங்டன்: இந்தியா அமெரிக்கா இடையே கடந்த பல காலமாக நல்லுறவே நிலவி வருகிறது. இந்தச் சூழலில் திடீரென சுமார் 19 இந்திய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த நடவடிக்கை பேசுபொருள் ஆகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ரஷ்யா உக்ரைன் இடையே ஆண்டுக் கணக்கில் மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த மோதலில் உக்ரைனுக்கு ஆதரவாக உலக நாடுகள் பல்வேறு உதவிகளைச் செய்தன. இதன் காரணமாகவே ரஷ்யாவால் மோதலில் வெல்ல முடியவில்லை.

இந்த மோதல் தொடங்கிய பிறகு, ரஷ்யாவைச் சேர்ந்த பல நிறுவனங்கள், தனிநபர்கள் மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. மேலும், ரஷ்யாவுக்கு உதவும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு வருகிறது.
பொருளாதாரத் தடை: இந்தச் சூழலில் தான் திடீரென பல இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு உதவியதாகக் கூறி அமெரிக்கா இந்த பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா இதுபோல பொருளாதாரத் தடைகளை விதிப்பது முதல்முறை இல்லை. கடந்த காலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அமெரிக்கா ஏற்கனவே சுமார் 400 நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்குப் பொருளாதாரத் தடை விதித்திருந்த நிலையில், அந்த லிஸ்டில் இப்போது 19 இந்திய நிறுவனங்கள், இரண்டு இந்திய நாட்டினர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த இருவரும் டெல்லியைச் சேர்ந்த நிறுவனத்தில் இயக்குநர்களாக பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லுறவு: இந்தியா அமெரிக்கா இடையே பல காலமாக நல்லுறவு நிலவி வருகிறது. அதேநேரம் இப்போது சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்லும் சதித் திட்டத்தில் இந்திய ஏஜெண்டின் பங்கு இருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி இருந்தது. இது இரு தரப்பு உறவுகளைச் சற்றே பாதித்து இருக்கும் சூழலில், இந்த பொருளாதாரத் தடை அறிவிப்பு வந்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யா போருக்கு உதவியதாக கூறி இந்த பொருளாதாரத் தடையை அமெரிக்கா வித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் வெளியுறவுத்துறை கூறுகையில், "ரஷ்யாவின் சட்டவிரோதப் போரைத் தொடர உதவிய சுமார் 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கிறோம். வெளியுறவுத் துறை சார்பில் 120 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதும், நிதித்துறை சார்பில் 270+ தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதும், வர்த்தகத் துறை மீது 40 நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எந்தெந்த நாடுகள்: இந்தியாவைச் சேர்ந்த 19 நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தவிரச் சீனா, மலேசியா, தாய்லாந்து, துருக்கி மற்றும் ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மேலும் கூறுகையில், "ரஷ்யாவுக்குச் செல்லும் ராணுவ ஆயுதங்களின் சப்ளையை தடுக்க அமெரிக்கா தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். ரஷ்யா தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்களை எங்கிருந்து வாங்குகிறதோ அதை முடக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வாரம் தான் அமெரிக்காவில் சட்ட விரோதமாகத் தங்கி இருந்ததாகச் சொல்லிப் பல நூறு இந்தியர்களை அமெரிக்கா வெளியேற்றி இருந்தது. இப்போது சில வாரங்களில் பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications