இந்தியாவுக்கு 500% வரி போடும் டிரம்ப்? ரஷ்யாவை பழிவாங்க அமெரிக்கா புதிய சட்டம்.. நமக்கு தான் சிக்கல்
வாஷிங்டன்: ஒரு பக்கம் டிரம்ப் இஷ்டத்திற்கு உலக நாடுகள் மீது வரிகளை விதித்து வருகிறார். இதனால் சர்வதேச வர்த்தகமே ஒருவிதப் பதற்றத்தில் இருக்கிறது. இந்தச் சூழலில் உக்ரைன் மோதலை நிறுத்த ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 50% வரியை அமெரிக்கா விதிக்கவுள்ளது. இது தொடர்பான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில காலமாகவே வரிகளைச் சுற்றியே உலக பொருளாதாரம் இயங்கி வருகிறது. டிரம்ப் ஒவ்வொரு நாளும் வரி தொடர்பாகப் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இது சர்வதேச அளவில் பதற்றத்தையும் குழப்பத்தையும் அதிகரிப்பதாகவே இருக்கிறது. அவர் அறிவித்திருந்த ரெசிப்ரோக்கல் வரி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

வரி மேல் வரி
ரெசிப்ரோக்கல் வரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளிதுள்ளார். மற்ற அனைத்து நாடுகளுக்கும் ஒவ்வொரு வரியை விதித்துள்ளார். இது தொடர்பான கடிதங்களும் கூட சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் இந்தியா மற்றும் சீனாவுக்கு மிகப் பெரிய சிக்கலைத் தரும் மசோதாவை டிரம்ப் அரசு கொண்டு வந்துள்ளது.
இந்தியாவுக்குச் சிக்கல்
அதாவது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை அல்லது யுரேனியத்தை வாங்கும் நாடுகளுக்கு அதிகபட்ச வரியை விதிக்கும் வகையிலான சட்டத்தை அமெரிக்க எம்பிக்கள் ப்ளூமென்டல் மற்றும் கிரஹாம் முன்மொழிந்துள்ளனர். ரஷ்ய எரிசக்தியில் 70% சீனா மற்றும் இந்தியா தான் வாங்கும் நிலையில், இந்தியா இதனால் அதிகபட்ச வரியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
இந்தியாவுக்கு 500% வரி
இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ப்ளூமென்டல், "புதினுக்கு பொருளாதார ஆதரவு தருவோர் என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை இது உருவாக்கும்" என்றார். இந்த அமெரிக்க எம்பி ரிச்சர்ட் ப்ளூமென்டல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை ரோமில் சந்தித்து, அமெரிக்காவின் ஆதரவை உறுதியளித்தார். இவர் முன்மொழிந்துள்ள புதிய மசோதாவின்படி ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் நாடுகளுக்கு 500% வரி விதிக்கப்படும்.
இந்த மசோதாவுக்கு இரு கட்சிகளிடமிருந்தும் 80 செனட் உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். ஒரு பக்கம் இது உலக வர்த்தகத்தைச் சீர்குலைக்கும் என்று எச்சரிக்கை எழுந்துள்ளது. அதேநேரம் போருக்கு ரஷ்யாவுக்குத் தேவைப்படும் நிதியை முடக்க இது தேவை என்று அமெரிக்க வல்லுநர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், ப்ளூமென்டல் தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கிறார்.
போரை முடிவுக்குக் கொண்டு வர ஒரே வழி
ப்ளூமென்டல் தனது ட்விட்டரில் மேலும், "ரஷ்யாவுக்கு நாம் விதிக்கும் புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ரோமில் நடந்த உக்ரைன் மீட்பு மாநாட்டில் நல்ல ஆதரவு இருக்கிறது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளே ரஷ்யாவின் போர் இயந்திரத்தை இயக்க உதவுகிறது. இந்த நாடுகள் மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்த மோதலை நிறுத்த கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. டிரம்ப் கூட இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், புதன் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் தான் இதுபோன்ற ஒரு வரி முன்மொழியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications